உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூரின் சில சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு மின்சார செலவு 3 முதல் 5 மடங்கு வரை கூடி இருக்கிறது.
இந்த நிலையில், பழைய கட்டணத்துடன் கூடிய ஒப்பந்தங்கள் காலாவதியாவதால் இந்த ஆண்டில் மேலும் பல நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சங்கடத்தைப் போக்க எரிசக்திச் சந்தை ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும்கூட, மின்சார செலவு கணிசமாக அதிகரிப்பதால் சில சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செலவைச் சிக்கனப்படுத்தக்கூடும் அல்லது வாடிக்கையாளர்கள் தலையில் கட்டக்கூடும் என்று நிறுவனங்களும் சங்கங்களும் கூறுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
தாங்கள் இதுவரை சந்தித்திராத அளவுக்கு மின்சாரக் கட்டணம் தங்களுக்கு மிக அதிகமாகக் கூடிவிட்டது என்று ஐந்து சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதோடு மட்டுமின்றி, நிலையான கட்டண உடன்பாடுகளைப் புதுப்பிக்க போராட வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது.
கட்டண உயர்வு காரணமாக ஐந்து மின்சார சில்லறை வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூர் சந்தையைவிட்டு சென்ற ஆண்டு வெளியேறிவிட்டன.
இவ்வேளையில், மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்துறையைச் சேர்ந்த எல்லா சிறிய, நடுத்தர நிறுவனங்களும் பாதிக்கப்படக்கூடிய நிலை இருப்பதாக சிங்கப்பூர் துல்லியப் பொருளியல் தொழில்நுட்பச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டீஃபன் கோ எதிர்பார்க்கிறார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களிடையே ஆக அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய நிறுவனங்கள் கட்டண உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆங் யுயிட் தெரிவித்தார்.
அதிகளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நிலையான கட்டணத்துடன் கூடிய உடன்பாடுகளைச் சில்லறை வர்த்தக நிறுவனங்களுடன் செய்துகொள்ள வேண்டும்.
அல்லது மொத்த விற்பனைச் சந்தையில் இருந்து அவை மின்சாரத்தைப் பெற வேண்டும்.
இந்தச் சந்தையில் மின்சாரக் கட்டணம் அடிக்கடி ஏறும் இறங்கும். ஏறத்தாழ 270,000 சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பெரும்பாலானவை அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை.
கடைத்தொகுதி போன்ற வாடகைக் கட்டடங்களில் செயல்படும் நிறுவனங்கள் விரைவில் அதிக மின்சாரக் கட்டணம் காரணமாக பாதிக்கப்படக்கூடும். அல்லது சொந்தமாக சில்லறை மின்சார வர்த்தக நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துகொள்கின்ற நிலை அவற்றுக்கு ஏற்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
நிலையான மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட உடன்பாடுகளில் மேலும் பல இந்த ஆண்டில் காலாவதியாகும் என்பதே இதற்கான காரணம் என்று திரு ஆங் தெரிவித்தார்.
உலக எரிசக்தி நெருக்கடி காரணமாக மூன்று முதல் ஐந்து மடங்கு கட்டணம் அதிகரிப்பு

