உக்ரேன்மீது ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, கூடுதலான விமானங்கள் உக்ரேன் வான்வெளியில் பறப்பதைத் தவிர்க்கக்கூடும் எனத் தெரிகிறது.
உக்ரேனுக்கும் அந்நாட்டின் வான்வெளி வழியாகவும் விமானச் சேவைகளை இயக்குவதை நிறுத்தவுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த கேஎல்எம் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், உக்ரேனுக்கு விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது பற்றிப் பரிசீலித்து வருவதாக ஜெர்மனியின் லுஃப்தான்சா நிறுவனம் கூறியிருக்கிறது.
லண்டனுக்கும் ஆசியாவுக்கும் இடையே நேற்று பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் உக்ரேன் வான்வெளியைத் தவிர்த்ததாகத் தெரிகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.
உக்ரேன் வான்வெளியைத் தவிர்க்கும் பட்சத்தில் அதன் அண்டை நாடுகளில் இருந்து புறப்படும் விமானங்கள் வழக்கத்தைவிட கூடுதல் தொலைவும் நேரமும் பறக்க வேண்டி இருக்கும். இருப்பினும், அதற்கான செலவு பெரிதும் அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எல்லையில் பதற்றநிலை அதிகரித்து வருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி ரஷ்யாவிற்கும் முக்கிய ஐரோப்பியப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கும் உக்ரேன் அழைப்பு விடுத்துள்ளது.
எல்லையில் படைகளைக் குவித்து வருவது குறித்து விளக்கம் அளிக்கும்படி முறையாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு ரஷ்யா செவிசாய்க்கவில்லை என்று உக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.
இதனையடுத்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் சந்தித்து, ரஷ்யா தனது திட்டங்கள் குறித்து வெளிப்படையாகக் கூறும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
உக்ரேன் எல்லைகளை ஒட்டி ஏறக்குறைய 100,000 படைவீரர்களைக் குவித்திருந்தாலும் உக்ரேன்மீது போர் தொடுக்கும் திட்டமேதும் தனக்கு இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஆனால், எந்த நேரத்திலும் ரஷ்யா வான்வழியாக உக்ரேன்மீது தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், பல்கேரியா, கனடா, எஸ்டோனியா, ஜெர்மனி, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, சவூதி ஆரேபியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகள் உக்ரேனில் உள்ள தங்கள் குடிமக்கள் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றன.
உக்ரேனில் உள்ள சிங்கப்பூரர்கள் முடிந்த அளவிற்கு விரைவாக அந்நாட்டைவிட்டு வெளியேறும்படி வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

