தமிழக ரயில்வே அணிக்காக விளையாடி வந்த காற்பந்து வீரர் ஒருவர் பயிற்சியின்போது திடலிலேயே மயங்கி விழுந்த சம்பவம் சென்னையில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த அமிர்தராஜா, 45 (படம்). கல்லூரியில் படித்தபோது மாவட்ட, மாநில அளவிலான காற்பந்துப் போட்டிகளில் சிறந்து விளங்கினார். இதையடுத்து, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டடின்கீழ் சென்னையில் உள்ள ரயில் வண்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) இவருக்கு வேலை கிடைத்தது.
அங்கும் காற்பந்து விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட இவர், பல பதக்கங்களையும் கிண்ணங்களையும் வென்றுள்ளார். ஜெர்மனியில் நடந்த உலக ரயில்வே அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இந்திய ரயில்வே அணி சார்பாகவும் இவர் விளையாடியுள்ளார். ரயில்வே ஊழியர்களுக்கும் இளையர்களுக்கும் இவர் காற்பந்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள காற்பந்துத் திடலில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென மயங்கிச் சரிந்தார் அமிர்தராஜா. இதைக் கண்டதும் சக வீரர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இவரைக் கொண்டு சென்றனர். ஆனால், அமிர்தராஜா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் ரயில்வே ஊழியர்களும் சக விளையாட்டாளர்களும் இவரிடம் பெயிற்சி பெற்றவர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

