சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங்கை அரசு வழக்கறிஞர் மேல் விசாரணை செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ரயீசா கான் பொய்யுரைத்த விவகாரம் தொடர்பாக நான்கு மணி நேரம் விவாதம் நடைபெற்ற பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மனசாட்சிப்படி தங்களது வாக்கை அளிக்குமாறு பிரதமர் லீ சியன் லூங்
கேட்டுக்கொண்டார்.
சிறப்புரிமைகள் குழுவின் அறிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களில் மூவர் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருவர் நியமன உறுப்பினர்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதியும் அக்டோபர் 4ஆம் தேதியும் மன்றத்தில் பொய்யுரைத்தது தொடர்பான விவகாரத்தை விசாரிக்க சிறப்புரிமைகள் குழு அமைக்கப்பட்டது. விசாரணை நடைமுறையின்போது திரு சிங், பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம் மற்றும் துணைத் தலைவர் ஃபைசால் மனாப் ஆகியோரின் கடுமையான நடத்தையை குழு கண்டறிந்தது.
விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இம்மூவரும், பொய் பேசியதை குழிதோண்டிப் புதைத்துவிடுமாறு ரயீசா கானை ஒருபோதும் கேட்டுக்கொண்டதில்லை என்று மறுத்துப் பேசினர். இது தொடர்பான இரண்டு தீர்மானங்களின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. பொய்யுரைத்ததன் மூலம் மன்றத்தின் மாண்பை சீர்
குலைத்த குற்றத்தை ரயீசா கான் புரிந்ததாக குழு கண்டறிந்ததை மன்றம் ஏற்பது அத்தீர்மானங்களில் ஒன்று. இந்தக் குற்றத்திற்காக ரயீசா கானுக்கு $35,000 அபராதம் விதிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.
திரு பிரித்தம் சிங், திரு ஃபைசால் ஆகியோர் மீது குற்றவியல் விசாரணை நடத்துவதற்கான சாத்தியத்தை ஆராயவும் குழு கேட்டுக் கொண்டது.
ரயீசா கான் பொய்யுரைத்த விவகாரம் மீது வாக்கெடுப்பு

