மேலும் பல நாடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையை (விடிஎல்) சிங்கப்பூர் விரிவுபடுத்துகிறது.
கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதிமுதல் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையின்றி சிங்கப்பூருக்கு வரலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தாய்லாந்தின் அனைத்து நகர்களில் இருந்தும் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையின்றி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள முடியும்.
மார்ச் 4ஆம் தேதிமுதல், இஸ்ரேல் மற்றும் பிலிப்பீன்சுடன் ‘விடிஎல்’ திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கவுள்ளது.
மேலும், ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் கூடுதலான பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவர். ‘விடிஎல்’ பயணிகள் எண்ணிக்கையில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நடப்பில் உள்ள 50 விழுக்காடு வரம்பு கட்டங்கட்டமாக அகற்றப்படும்.
வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) முதல், கொவிட்-19 அபாயம் குறைவாக உள்ள நாடுகள் மற்றும் பகுதிகளில் இருந்து வருவோர், இங்கு வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் விரைவு பரிசோதனை மையத்திற்குச் சென்று மேற்பார்வையின்கீழ் ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) செய்துகொள்ளலாம். விமான நிலையம் வந்திறங்கியவுடன், கட்டணம் அதிகமாக உள்ள பல்படிய தொடர்வினை பரிசோதனையை (பிசிஆர்) அவர் செய்துகொள்ள வேண்டியதில்லை.