சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கான தரைவழிப் பயணப் பாதையை (விடிஎல்) பயன்படுத்த அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதியிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவிருக்கிறது.
அந்தத் தேதியிலிருந்து பயணம் மேற்கொள்வதற்கான கூடுதல் பேருந்துப் பயணச்சீட்டுகளின் விற்பனை புதன்கிழமை (பிப்ரவரி 16) தொடங்கியது.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் உள்ளூரில் கிருமித்தொற்று நிலவரம் அனேகமாக பாதிக்கப்படாது என்பதால், எல்லைக் கட்டுப்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் தரைவழிப் பயணிகளுக்கான அனுமதி எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்படுவதாகவும் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
சென்ற ஆண்டு டிசம்பரில், ஓமிக்ரான் பரவலைத் தள்ளிப்போடும் நோக்கில், அந்த எண்ணிக்கை தற்காலிகமாகப் பாதியாகக் குறைக்கப்பட்டது.
மேலும், பிப்ரவரி 21ஆம் தேதி இரவு 11.59 மணியில் இருந்து, தரைவழிப் பயணம் மேற்கொள்ளும் ‘விடிஎல்’ பயணிகளுக்கான நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுவதாக கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு கூறியது.
சிங்கப்பூர் வந்துசேர்ந்ததும் பேருந்து முனையத்திலேயே கண்காணிப்புடன் கூடிய ‘ஏஆர்டி’ சோதனை மேற்கொள்வதற்குப் பதிலாக, இங்கு வந்த 24 மணி நேரத்தில் அத்தகைய சோதனையை அதற்கான விரைவுப் பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ளலாம். அதற்குப் பதிந்துகொள்வதற்கான இணையத் தொடர்பு விவரம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இனி, சிங்கப்பூர் வந்த இரண்டாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை, கண்காணிப்பு தேவையின்றி சொந்தமாகவே ‘ஏஆர்டி’ சோதனை மேற்கொள்ளத் தேவையில்லை. சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பும் இங்கு வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் விரைவுப் பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது.