சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டில் நடந்த மோசடிகளில் மொத்தம் $633.3 மில்லியனை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளனர். இந்த அதிர்ச்சி தரும் தகவலை காவல்துறை நேற்று தெரிவித்தது.
2021ஆம் ஆண்டில் நடந்த குற்றச்செயல்கள் பற்றிய புள்ளி விவரங்களை அது வெளியிட்டது.
முந்திய ஆண்டில் ஏமாற்றப்பட்ட $268.4 மில்லியனுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு ஏறக்குறைய 2.5 மடங்கு அதிகமான தொகையை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளனர். சுமார் 90 விழுக்காடு மோசடிகள் வெளிநாட்டிலிருந்து செய்யப் பட்டவை. மோசடிக்காரர்கள் கும்பலாகச் செயல்பட்டதுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கை தேர்ந்தவர்களாகவும் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
"இத்தகைய மோசடிகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பது சிரமம். வெளிநாட்டில் உள்ள அமலாக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை. இல்லையென்றால் அவர் களைக் கண்டுபிடித்து வழக்குத் தொடுப்பது இயலாத காரியம்.
"திருடப்பட்ட பணம் வெளிநாட்டுக்கு மாறியதும் அதனை மீட்ப தென்பது சிரமம். இந்த மோசடி களைப் பற்றி அறிந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்த பாதுகாப்பாகும்," என்று காவல்துறை கூறியது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்படும் சம்பவங்களும் கடந்த ஆண்டு அதிகரித்தன.
2020ல் 132 வேலை மோசடி தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 4,552க்கு கூடியுள்ளது.
புதுப்புது வழிகளில் வேலை மோசடிகள் நடப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திரைப்பட நுழைவுச் சீட்டுகளை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என நம்பவைக்கும் போலி கைபேசி செயலிகள் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டதாகவும் எளிதாக பணம் கிடைப்பதாக எண்ணி சிலர் இதில் சிக்கிவிடுவதாகவும் காவல்துறையினர் கூறினர்.
சிங்கப்பூர் காவல்படையின் மோசடி தடுப்புப் பிரிவின் துணை உதவி ஆணையரான அய்லீன் யாப், வேலை மோசடி அதிகரிப் பதற்கு கொள்ளைநோயும் ஒரு காரணம் என்றார்.
"பலர் வேலையை இழந்தனர். ஏராளமானோருக்கு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க பகுதிநேர வேலை தேவைப்பட்டது," என்று ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு மானபங்க குற்றச்செயல்களும் சற்று அதி கரித்தன. 2020ல் 1,321 மானபங்கச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 1,480ஆக கூடியது.
கடந்த ஆண்டின் 918 மானபங்க வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் அறிமுக மானவர்களாக இருந்தனர் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.

