அனைத்துலக சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங் கனைக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
'தங்கம்' வென்று ஊர் திரும்பிய கோமதி, ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்கியதும் கரவொலி எழுந்தது.
உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அங்கிருந்த ரயில் பயணிகள், ரயில்வே காவல்துறை, பொது மக்கள் என அனைவரும் அவரை சூழ்ந்து உற்சாகமாக வரவேற்று சிலர் கைபேசி மூலம் அவருடன் படம் பிடித்துக் கொண்டனர்.
ஈரோடு மொடக்குறிச்சியை அடுத்துள்ள விளக்கேத்தி கிராமத்தைச் சேர்ந்த கோமதி சிறு வயதில் இருந்தே சிலம்பத்தை முறைப்படி கற்று, சுழன்று வீசுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் இம்மாதம் 7ஆம் தேதி நேப்பாள நாட்டில் அனைத்துலக அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஹாக்கி, காற்பந்து, குத்துச்சண்டை, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 70 பேர் பங்கேற்றனர். சிலம்பம் பிரிவில் பங்கேற்ற கோமதி தங்கப்பதக்கத்தை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து உள்ளார்.
இந்தியா, நேப்பாளத்தில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 42 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

