சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில், 'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கான தரைவழிப் பயணிகள் அனுமதி எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதியிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவிருக்கிறது.
நேற்று முதல் இரு நாடுகளுக்கு இடையில் கூடுதல் பேருந்துப் பயணச் சீட்டுகளின் விற்பனை தொடங்கியது.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை இப்போது பாதிக்கப்படாது என்ற நிலையில், எல்லைக் கட்டுப்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் தரைவழிப் பயணிகளுக்கான அனுமதி எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்படுவதாகவும் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
சென்ற ஆண்டு டிசம்பரில், ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் நோக்கில், அந்த எண்ணிக்கை தற்காலிகமாகப் பாதியாகக் குறைக்கப்பட்டது.
மேலும், பிப்ரவரி 21ஆம் தேதி பின்னிரவு மணி 11:59இல் இருந்து, தரைவழிப் பயணம் மேற்கொள்ளும் 'விடிஎல்' பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மாற்றமடைவதாக கிருமிப் பரவலைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழு அறிவித்தது.
சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் பேருந்து முனையத்திலேயே கண்காணிப்புடன் கூடிய 'ஏஆர்டி' சோதனை மேற்கொள்வதற்குப் பதிலாக, இங்கு வந்த 24 மணி நேரத்தில் அத்தகைய சோதனையை அதற்கான விரைவுப் பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ளலாம். அதற்குப் பதிந்துகொள்வதற்கான இணையத் தொடர்பு விவரம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இனி, வந்த இரண்டாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை, கண்காணிப்பு தேவையின்றி சொந்தமாகவே 'ஏஆர்டி' சோதனை மேற்கொள்ளத் தேவையில்லை.
'விடிஎல்' பயணிகள் வந்தவுடன் பரிசோதனை செய்துகொள்வதோடு, அதன் பிறகு இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னர் பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது.
புதிய நடைமுறையின் கீழ், வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரும் குறுகிய கால அனுமதி வைத்திருப்போரும் மட்டுமே 'விடிஎல்' தரைவழிப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கான அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இனி, சிங்கப்பூர் வருவதற்கு ஏழு நாள் முன்னர் சென்றிருந்த மற்ற 'விடிஎல்' பங்கேற்பு நாடுகளின் விவரங்களைச் சமர்ப்பித்தால் போதும். இப்போது அது 14 நாள்களாக உள்ளது.
எல்லைக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்து, படிப்படியாக 'விடிஎல்' திட்டத்தைப் பாதுகாப்பான முறையில் விரிவு படுத்தவிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள பொதுச் சுகாதார நிலவரத்துடன் உலகளாவிய நிலைமையையும் கருத்தில்கொண்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் ஆகிய இடங்களில் இருந்து வரும், முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் இனி சிங்கப்பூர் வந்ததும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை.
பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று அறிவித்தது.
இரு இடங்களில் இருந்தும், தொடக்கத்தில் வாரத்திற்கு 700 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூர் நேரப்படி, பிப்ரவரி 22ஆம் தேதி காலை பத்து மணியில் இருந்து பயணிகள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.