மலேசியாவில் கடந்த ஒரே வாரத்தில் 12 வயதுக்கும் குறைவான சிறாரிடையே கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 160% அதிகரித்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று தெரிவித்தார்.
ஆண்டு தொடங்கி ஐந்தாவது, ஆறாவது வாரங்களில் குறிப்பாக இளம் பிள்ளைகளிடையே கொவிட்-19 கிருமித்தொற்று பதிவாகியதில் 160% அதிகரிப்பு இருந்தது. இது அமைச்சுக்குக் கவலை தரும் ஒரு நிலை என்று அமைச்சர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
ஐந்தாவது வாரத்தில் மட்டும் இளம் பிள்ளைகளிடையே 6,524 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. ஆறாவது வாரத்தில் அந்த எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து 16,959 ஆனது. ஐந்தாவது வாரத்தில் 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட 4,242 சிறார்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதே வயதுப் பிரிவினரிடையே ஆறாவது வாரத்தில் 10,796 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
"இளம் பிள்ளைகளிடையே பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. மருத்துவமனைகளில் இப்பிள்ளைகள் சேர்க்கப்படும் விகிதமும் அதிகம்," என்றார் அமைச்சர் கைரி. இந்நிலை கருதி பெற்றோர்கள் உடனே 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட தங்களின் பிள்ளைகளைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவுசெய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். பள்ளிகள் அண்மையில் திறக்கப்பட்டதன் விளைவாக இந்த அதிகரிப்பு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரே வாரத்தில் 3,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குத் கொவிட்-19 தொற்று உறுதி
மலேசியாவில் ஒரே வாரத்தில் 3,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு கொவிட்-19 இருப்பது உறுதியானதாக அந்நாட்டு சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டு தொடங்கி இதுவரை 7,702 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஒரே வாரத்தில் தொற்று உறுதியானது.
இதன்படி இம்மாதம் 6ஆம் தேதிக்கும் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடையே மொத்தம் 3,343 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
கிருமி தொற்றிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து விடுப்பு பெற்றுள்ள நிலையில், மருத்துவமனை நோயாளிகளுக்கான சேவைகளிலும் பராமரிப்பிலும் குறைந்தபட்ச பாதிப்புகள் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மலேசியாவில் பதிவாகும் அன்றாட கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை, புதிய உச்சத்தை எட்டியுள்ளதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று பதிவான 24,599 சம்பவங்களை நேற்றைய 27,831 சம்பவங்கள் மிஞ்சிவிட்டன.
இந்த எண்ணிக்கையில் தொற்றுக்கான அறிகுறிகளே இல்லாத, அல்லது மிதமான அறிகுறிகள் உடையவர்கள் 99.65 விழுக்காட்டினர் என்று அவர் குறிப்பிட்டார்.

