சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (பிப்ரவரி 20) கனமழை பெய்ததன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்பர் பாய லேபார் சாலையில் மழைநீர் அளவு 100 விழுக்காட்டை எட்டியதால் வெள்ள அபாயம் நிலவியதாக பொதுப் பயனீட்டுக் கழகம் மாலை 4.30 மணியளவில் அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
சுவா சூ காங் அவென்யூ 1லும் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாலை 4.20 மணியளவில் அங்கு மழைநீர் அளவு 90 விழுக்காட்டிற்குமேல் உயர்ந்ததாக கழகம் பதிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் தீவின் பல இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக கழகம் முன்னதாகக் கூறியிருந்தது.
இதற்கிடையே, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் முன்னுரைப்பின்படி இந்த வாரம் முழுவதும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் காற்றுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அது முன்னதாகக் கூறியிருந்தது.