சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பொதுப் போக்குவரத்து பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. என்றாலும், கொவிட்-19க்கு முந்திய நிலவரத்துடன் ஒப்புநோக்க, அது குறைவாக உள்ளது.
கடந்த ஆண்டு பேருந்து, ரயில் பயணங்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5.259 மில்லியனாகப் பதிவாகின. இது, 2020ஆம் ஆண்டைவிட 4.3 விழுக்காடு அதிகம்.
நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 21) வெளியிட்ட தகவலில் இது தெரியவந்துள்ளது.
பேருந்துப் பயணங்களே பெரிய அதிகரிப்பைக் கண்டன. பேருந்துப் பயணங்கள் 4.5 விழுக்காடு கூடி நாள் ஒன்றுக்கு மூன்று மில்லியனைக் கடந்தன. பெரு விரைவு ரயில் (எம்ஆர்டி), இலகு ரயில் (எல்ஆர்டி) பயணங்கள் 4.1 விழுக்காடு அதிகரித்து நாள் ஒன்றுக்கு 2.251 மில்லியனாகப் பதிவாகின.
இவ்வாண்டு சிங்கப்பூர் பொருளியல் தொடர்ந்து மீட்சியடையக்கூடும் என்பதால் இன்னும் கூடுதலானோர் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பேருந்து, ரயில் பயணங்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5.785 மில்லியனாகப் பதிவாகின. இது, கடந்த ஆண்டின் அன்றாட சராசரி எண்ணிக்கையைவிட 10 விழுக்காடு அதிகம்.
என்றாலும், பொதுப் போக்குவரத்து பயணங்கள் கொவிட்-19க்கு முந்திய நிலவரத்துக்குத் திரும்ப இன்னும் சற்று காலம் எடுக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இதுவரை இல்லாத அளவாக 2019ல் பொதுப் போக்குவரத்து பயணங்கள் நாள் ஒன்றுக்கு 7.691 மில்லியனாகப் பதிவாகி இருந்தன.
இதற்கிடையே டாக்சி, தனியார் வாடகை கார் பயணங்களும் கடந்த ஆண்டு அதிகரித்தன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 553,000 பயணங்கள் செய்யப்பட்டன. இது, 2020ஆம் ஆண்டைவிட 7.2 விழுக்காடு அதிகம்.
தனியார் வாடகை கார் பயணங்கள் 8 விழுக்காடு வளர்ச்சி கண்டு நாள் ஒன்றுக்கு 321,000ஐ எட்டின. டாக்சி பயணங்கள் 5.9 விழுக்காடு கூடி 232,000ஐ தொட்டன.
கடந்த ஜனவரி மாதம் டாக்சி, தனியார் வாடகை கார் பயணங்கள் 3.8 விழுக்காடு உயர்ந்து நாள் ஒன்றுக்கு 574,000ஆக பதிவாகின.
டாக்சி, தனியார் வாடகை கார் பயணங்கள் குறித்த தகவல் அளிக்கப்படுவது இது இரண்டாவது முறை.