கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளை மார்ச் நடுப்பகுதியில் இந்தியா மீண்டும் தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய சுகாதார அமைச்சுடன் அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறியப்படுகிறது. மார்ச் 15ஆம் தேதிவாக்கில் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்தத் தகவல் விமானப் பயணிகளுக்கு நற்செய்தியாக அமையும். இருப்பினும், விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
“வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மார்ச் 15ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படலாம். அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கென இந்திய விமான நிலையங்களில் பின்பற்றப்படும் வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்,” என்று அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுவதாக ‘என்டிடிவி’ செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2020 மார்ச் 23ஆம் தேதிமுதல் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளை இந்தியா நிறுத்திவைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதிமுதல் இவை படிப்படியாக தொடரவிருந்தன. எனினும், உலகம் முழுவதும் உருவெடுத்த ஓமிக்ரான் பரவல், அதை சாத்தியமாக்கவில்லை.
இந்தியா, 40க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சிறப்புப் பயண ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. என்றாலும், கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், விமானப் பயணத்துக்கான தேவை அதிகரித்துள்ளதால், பயணச்சீட்டு விலைகளும் ஏறுமுகம் கண்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சுகாதார அமைச்சின் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இம்மாதம் 14ஆம் தேதி நடப்பிற்கு வந்தது. ஏழு நாள்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதும் எட்டாம் நாளில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டியதும் ரத்து செய்யப்பட்டது.
வெளிநாட்டுப் பயணிகள் பயணத்தைத் தொடங்குவதற்குமுன் 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவர்கள் பதிவேற்றம் செய்யலாம்.
அத்துடன், தொற்று அபாயமுள்ள நாடுகளின் பட்டியலும் அகற்றப்பட்டது.