தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி இமாலய வெற்றிபெற்றது.
மாநிலத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அத்துடன், மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 131ல் திமுகவும் நான்கில் அதிமுகவும் வெற்றி பெற்றன.
அதுபோல், 489 பேரூராட்சிகளில் முடிவுகள் வெளியான தொகுதிகளில் 392 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வென்றன. அதிமுக 19 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக ஆறு இடங்களிலும் ஐஜேகே கட்சி இரு இடங்களிலும் பாமக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தலா ஓர் இடத்திலும் வென்றன.
தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்குச் சாதகமாக அமைந்ததால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. நேற்றுப் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
விஜயகாந்தின் தேமுதிகவும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேறவில்லை.
இந்த வெற்றி குறித்துக் கருத்துரைத்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றுள்ள வெற்றி திமுக ஆட்சிமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்," என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இம்மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 12,838 தொகுதிகளுக்கு 57,778 பேர் போட்டியிட்டனர். 60.70% வாக்குகள் பதிவான நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

