நடப்பில் உள்ள கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மாற்றி
அமைக்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த சில நாள்களாக சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று நடப்புக்கு வர இருந்த மாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்றும், அடுத்த மாதம் 4ஆம் தேதியிலும் மாற்றங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட இருந்தன.
புதிய தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
அதுவரை தற்போது நடப்பில் உள்ள விதிமுறைகள் தொடரும் என்று அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 பாதுகாப்பு நட
வடிக்கைகள் தொடர்பான ஐந்து அம்சங்கள் எளிமைப்படுத்தப்படும் என்று இம்மாதம் 16ஆம் தேதியன்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார்.
ஒன்றுகூடுவோர் எண்ணிக்கை, முகக்கவசம் அணிதல், வேலையிட விதிமுறைகள், சமூக இடைவெளி விதிமுறைகள், குறிப்பிட்ட சில இடங்களில் அனுமதிக்கப்
படக்கூடியோர் எண்ணிக்கை ஆகியவை அந்த ஐந்து அம்சங்களாகும்.
எந்த ஒரு நேரத்திலும் ஒரு
வீட்டிற்கு ஐந்து விருந்தினர்கள் வரை செல்லலாம் என்ற விதிமுறை நடப்புக்கு வர இருந்தது. தற்போது ஒரு நாளுக்கு அதிகபட்சம் ஐந்து விருந்தினர்கள் மட்டுமே ஒரு
வீட்டிற்குச் செல்லலாம்.
அதே போல வேலையிடங்களில் ஐந்து பேர் வரை ஒன்றுகூடுவதை அனுமதிக்க அமைச்சு திட்டமிட்டிருந்தது. மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் முகக்கவசங்கள் அணியும் சூழல்களில் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்
பிடிப்பது ஊக்குவிக்கப்பட்டாலும் அது கட்டாயமானதாக இருந்திருக்காது. அவ்வாறு நடந்திருந்தால் பொது இடங்களில் ஓர் இருக்கையை விட்டு அமரும் வழக்கம் முடிவுக்கு வந்திருக்கக்கூடும்.
அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து திருமணங்கள், வழிபாடுகள், இறுதிச்சடங்குகள், வர்த்தகக் கூட்டங்கள் ஆகியவை நடைபெறும் இடங்களின் அளவுக்கு ஏற்ப அதில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இத்தகைய இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் அனுமதிக்கப்படும் அணுகுமுறை தொடர்கிறது.
மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று முதல் அனைத்து வகை விளையாட்டு நடவடிக்கைகளிலும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிகபட்சம் 30 பேர் பங்கெடுக்கும் நிலை நடப்புக்கு வந்திருக்கக்கூடும்.
"கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும் கட்டுக்குள் வைத்திருப்பதில் தற்போதைய விதிமுறைகள் உதவினால் அதைத் தொடர்வது நல்லது. அதற்குப் பதிலாக தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் அது நிலைமையை மோசமாக்கக்கூடும்," என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.

