வரும் மார்ச் முதல் தேதியில் இருந்து டாக்சி கட்டணங்களை கம்ஃபர்ட்டெல்குரோ உயர்த்த இருக்கும் நிலையில், டிரான்ஸ்கேப், பிரைம் டாக்சி, பிரீமியர் டாக்சி, ஸ்டிரைட்ஸ் டாக்சி ஆகிய மற்ற டாக்சி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
தங்களது இந்த முடிவை அந்நிறுவனங்கள் தன்னிடம் தெரிவித்திருப்பதை ஓர் அறிக்கைமூலம் பொதுப் போக்குவரத்து மன்றம் நேற்று உறுதிசெய்தது. அதன் தொடர்பில் வேறு விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
டாக்சி கட்டணத்தை உயர்த்தப்போவதாக இம்மாதத் தொடக்கத்தில் கம்ஃபர்ட்டெல்குரோ அறிவித்திருந்தது. அதனையடுத்து, மற்ற டாக்சி நிறுவனங்களும் அதேபோல் கட்டணத்தை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துமுன் அதுகுறித்து குறைந்தது ஏழு நாள்களுக்குமுன் அந்நிறுவனங்கள் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில், மார்ச் 7 அல்லது 8ஆம் தேதிவாக்கில் மற்ற நிறுவனங்களின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரலாம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
கடைசியாக, 2011ஆம் ஆண்டிலும் இப்படி கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் டாக்சி கட்டணத்தை உயர்த்தியபின் மற்ற டாக்சி நிறுவனங்களும் அதனைப் பின்பற்றி, கட்டண உயர்வை அறிவித்தன. அப்போது, சாதாரண டாக்சிகளுக்குத் தொடக்கக் கட்டணத்தில் 20 காசும் அதன்பின் வரும் தொலைவு அடிப்படையிலான கட்டணத்தில் இரண்டு காசும் உயர்த்தப்பட்டன.
அதுபோல இம்முறையும் தொடக்கக் கட்டணம் 20 காசு உயர்த்தப்படும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ அறிவித்துள்ளது.
அத்துடன், தொலைவு, நேர அடிப்படையிலான கட்டணமும் கூடுகிறது. சாதாரண டாக்சிகளுக்கு ஒவ்வொரு 400 மீட்டர் தொலைவிற்கும் (அல்லது 10 கிலோமீட்டருக்குப் பின் ஒவ்வொரு 350 மீட்டருக்கும்) இரண்டு காசும் ஒவ்வொரு 45 நொடிகள் காத்திருப்புக்கு இரண்டு காசும் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சென்ற 2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் நடைமுறைச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ளவும் கொவிட்-19 பெருந்தொற்றால் வருமான இழப்பை எதிர்கொண்டுள்ள டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்கவும் டாக்சி கட்டணம் உயர்த்தப்படுவதாக கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்திருந்தது.
கடந்த 1998ஆம் ஆண்டில் இருந்து டாக்சி கட்டணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதாவது, டாக்சி மற்றும் தனியார் வாடகை கார்களுக்கான கட்டணங்களை முடிவுசெய்வதில் பொதுப் போக்குவரத்து மன்றம் குறுக்கிடாது.
இருப்பினும், கட்டண உயர்வு குறித்த விவரங்களை டாக்சி, தனியார் வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள் மன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், கட்டண வசூலிப்பில் வெளிப்படைத்தன்மை இருக்கும். டாக்சி சேவையை நாடும்போது கூடுதலாக எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கலாம் என்பதைப் பயணிகளும் அறிந்துகொள்ள முடியும்.

