சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன
இந்தோனீசியாவின் சுமத்ரா தீவை நேற்றுக் காலை உலுக்கிய நிலநடுக்கத்தில் மேற்கு பசாமான் பகுதியில் குறைந்தது எழுவர் மாண்டுவிட்டனர்; 85 பேர் காயமடைந்தனர்.
சிங்கப்பூர் நேரப்படி காலை 9.39 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று பதிவானது. இதனால் 400 வீடுகளும் பள்ளி, வங்கி, பள்ளிவாசல் உள்ளிட்ட பல கட்டடங்களும் சேதமடைந்ததாக இந்தோனீசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
சிங்கப்பூரிலும் பிடோக், செங்காங், ஹவ்காங், பொங்கோல், லெவண்டர் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய வர்த்தக வட்டாரத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ஹவ்காங்கில் பத்தாம் தளத்தில் உள்ள தமது வீட்டில் காலை உணவு உட்கொண்டபோது உணவுமேசை ஆடியதாகச் சொன்னார் திருவாட்டி லின் சுவா, 44.
"இருமுறை கிட்டத்தட்ட ஐந்து நொடிகளுக்கு அதிர்வுகள் நீடித்தன. என் கணவரும் அதை உணர்ந்தார்," என்றார் திருவாட்டி சுவா.
ஓரிரு நிமிடங்களுக்கு அதிர்வுகளை உணர்ந்ததாகச் சொன்னார் லெவண்டரில் வசிக்கும் திருவாட்டி வெண்டி கோ.
"முதலில் எனது புதிய சலவை இயந்திரம்தான் அப்படி அதிர்கிறது என்று நினைத்தேன். ஆனால், என்னுடன் காணொளி அழைப்பில் இருந்த மற்றவர்களும் அவ்வாறு உணரவே, பின்னர் அது நிலநடுக்கம் என்பதை உணர்ந்தேன்," என்றார் 40களில் இருக்கும் திட்ட மேலாளரான திருவாட்டி வெண்டி.
"கட்டடம் ஆடுவதுபோலத் தோன்றியது. மேசைமீது இருந்த கணினித் திரைகளும் நகன்றன," என்றார் பிடோக்கில் வசிக்கும் சமூகத் திட்ட நிர்வாகி ஷால், 26.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பல அழைப்புகள் வந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. ஆயினும், எவரும் காயமடையவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மலேசியாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மேற்குப் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டின் வானிலை மையம் குறிப்பிட்டது.

