மின்னணு, கணினி, ராணுவப் பொருள்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யவும் அனுமதி இராது
உக்ரேன் மீது படை எடுத்துள்ள ரஷ்யா வின் பொருளியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், நான்கு ரஷ்ய வங்கிகளுக்கு சிங்கப்பூர் தடைகளை விதிக் கிறது. குறிப்பிட்ட சில ஏற்றுமதிகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் செயல்படும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ரஷ்யாவின் வங்கிகளுடன், அந்தத் தடை காரணமாக தொழில்களில் ஈடுபட முடியாது. மின்னணு, கணினி, ராணுவப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யவும் தடை வரும்.
உக்ரேன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷ்யாவை, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கண்டித்து இருக்கின்றன.
ரஷ்யாவுக்கான சிங்கப்பூர் தடைகள் தொடர்பான மேல் விவரங்களை வெளி யுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
"இந்தத் தடைகளும் கட்டுப்பாடுகளும் உக்ரேன் மீது போர் தொடுத்து அதன் இறையாண்மையைக் கீழறுப்பதற்கான ரஷ்யாவின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும்," என்று அமைச்சு தெரிவித்தது.
அந்த நான்கு வங்கிகளுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட அல்லது தொழில் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நிதி நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும்.
ஏற்கெனவே தொழில் உறவுகள் இருக்கும்பட்சத்தில் நிதி நிறுவனங்கள் அந்த நான்கு ரஷ்ய வங்கிகளின் சொத்துகளை, நிதியை முடக்கிவிட வேண்டும்.
ரஷ்ய அரசுக்கும் ரஷ்ய கூட்டமைப்பு மத்திய வங்கிக்கும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளுக்கும் நிதி திரட்டுவதற்கான பரிவர்த்தனைகள், நிதிச் சேவைகளும் தடை செய்யப்படும்.
புதிய பங்குப் பத்திரங்களை வாங்குவது, விற்பது, புதிதாக நிதி திரட்ட வசதி செய்யும் நிதிச் சேவைகளை வழங்குவது, இந்த அமைப்புகளுக்கு புதிய கடன்களை வழங்குவது அல்லது அதில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு இத்தடைகள் பொருந்தும்.
இவற்றின் புதிய பங்குகளில் சிங்கப்பூர் அரசும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் முதலீடு செய்யாது. ரஷ்யா தொடர்பான தடைசெய்யப்படும் பரிவர்த்தனைகள் இணைய நாணயங்களுக்கும் பொருந்தும்.

