ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் 2022
மலேசியாவின் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 42ல் முன்னிலை பெற்று இருந்ததாக அதிகாரபூர்வமற்ற முடிவுகள் தெரிவித்தன (நேற்று இரவு 8.40 மணி நிலவரம்).
தேர்தல் நாளான நேற்று அதிகாலையில் இருந்தே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர். மலேசியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்துவரும் நிலையில் அவர்கள் முகக்கவசம் அணிந்தும் பாதுகாப்பு இடைவெளி விதியைப் பின்பற்றியும் வரிசையில் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் ஏறக்குறைய 2.6 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். அவர்களுக்காக 1,021 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மலேசியாவில் முதன்முறையாக 18 முதல் 21 வரைப்பட்ட இளையர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதால் 'ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் 2022' வரலாற்றில் இடம்பெற்றது. கிட்டத்தட்ட 175,000 பேர் முதன்முறையாக வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
மொத்தமுள்ள 56 தொகுதிகளைக் கைப்பற்ற, 15 கட்சிகளைச் சேர்ந்த 239 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் முன்னணியும் எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 50 இடங்களிலும் பெஜுவாங் கட்சி 42 இடங்களிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தன. 16 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.
ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை. மாலை 4 மணி நிலவரப்படி 50% வாக்குகளே பதிவாகியிருந்தன. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
வாக்குச்சாவடிகளில் நெரிசல் இல்லாததால் வாக்காளர்கள் ஒரு சில நிமிடங்களில் வாக்களித்துவிட்டு வெளியேற முடிந்தது.
"ஒட்டுமொத்த செயல்முறையும் ஒரு நிமிடத்தில் முடிந்துவிட்டது," என்றார் பெர்லிங் தொகுதியில் வாக்களித்த கல்லூரி மாணவி சஞ்சனா ஆனந்தன், 18.
ஜோகூர் மாநிலம் கடந்த மூவாண்டுகளில் மூன்று முதல்வர்களைக் கண்டுவிட்டதால் நிலையான அரசாங்கம் அமைய இளையர்கள் விரும்புவதாகக் கூறினார் முதன்முறையாக வாக்களித்த குமாரி சஞ்சனா.
இதற்கிடையே, வாக்குச்சாவடியை முன்னதாகவே மூடிவிட்டதாகக் கூறி, அதனை எதிர்த்து சிலர் அவ்வாக்குச்சாவடிக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் பரவலாகியுள்ளது. அதன் தொடர்பில் புகார் எதுவும் பதிவாகவில்லை என்றும் ஆனாலும் காவல்துறை விசாரிக்கும் என்றும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் கம்ருல் ஸமான் மமத் கூறினார்.
ஜோகூர் சட்டமன்றத் தேர்தலானது அடுத்த மலேசியப் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.
முன்னதாக, குறைவான வாக்குகள் பதிவானால் அது தேசிய முன்னணிக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எச்சரித்து இருந்தனர். அவர்கள் சொன்னதுபோலவே, தேசிய முன்னணி கடந்த 2018 தேர்தலைக் காட்டிலும் இம்முறை அதிக பெரும்பான்மை பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
வாக்களித்ததும் உயிர் பிரிந்தது
இதனிடையே, மூவாரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வந்த 78 வயது முதியவர் ஒருவர் வாக்களித்தபின் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். நேற்றுக் காலை 11.40 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

