சிங்கப்பூர் தனது பரந்த இன சமநிலையைச் சீராகக் கட்டிக்காக்கும் அதேவேளையில், உலகம் முழுவதிலும் இருந்து அது குடியேறிகளை வரவேற்கிறது. அப்படி வரும் குடியேறிகள் தங்களுக்கே உரிய தனித்தன்மைகளையும் கலாசாரங்களையும் கட்டிக்காக்கும் போதிலும், உள்ளூர் சமூகத்தில் ஒன்றிணையும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
எல்லாருக்கும் பொதுவான சிங்கப்பூர் அடையாளத்தையும் ஈடுபாட்டு உணர்வையும் பேணி வளர்ப்பதன் மூலம் நாம் தொடர்ந்து பிணைப்புமிக்க ஐக்கிய மக்களாக இருந்துவருவோம் என்றார் அவர்.
சிங்கப்பூர் சிந்தி சங்கத்தின் 100வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நேற்று ஷங்கிரி-லா ஹோட்டலில் நடந்தது. அதில் பேசிய பிரதமர், இதையே சிங்கப்பூரில் சிந்தி சமூகத்தினர் வெற்றிகரமான முறையில் சாதித்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இப்போதைய பாகிஸ்தானிலுள்ள சிந்து பகுதியிலிருந்து இங்கு வந்த சிந்தி சமூகத்தினர் தங்களுடைய பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்கிறார்கள். அதேநேரத்தில் சிங்கப்பூர் சமூகத்தில் அவர்கள் ஒன்றிணைகிறார்கள் என்றார் பிரதமர்.
சிங்கப்பூர் சிந்திகளில் பலரும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வணிகர்களாக சிங்கப்பூருக்கு வந்தனர்.
அந்த நாட்களின் ஆர்ச்சர்ட் சாலையாக இருந்த ஹை ஸ்திரீட்டில் அவர்கள் ஜவுளிக்கடை வைத்து இருந்தார்கள்.
சரக்கு இறக்கி, ஏற்றப்படும் ஓர் இடமாக சிங்கப்பூர் செயல்பட்டது. அதன் முழு அனுகூலத்தையும் சிந்திக்கள் பயன்படுத்திக்கொண்டனர். ஜப்பான், கொரியா, சீனாவில் இருந்து ஜவுளிகளை இறக்குமதி செய்து அவற்றைத் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா போன்ற இதர வட்டாரங்களுக்கு ஏற்றுமதி செய்தனர்.
பிறகு அவர்கள் மின்னணு போன்ற தொழில்துறையில் ஈடுபட்டனர். இப்போது சிந்திக்கள் தங்களுடைய வணிகத் தொழிலுக்கு அப்பாலும் பல துறைகளில் விரிவடைந்துள்ளனர். அரசாங்கத்துறை அல்லது மருத்துவர், வழக்கறிஞர் அல்லது பொறியியல் போன்ற நிபுணர்களாக இருந்தாலும் தங்கள் துறையில் முத்திரை பதித்துள்ளனர்.
காலவோட்டத்தில் சிந்தி சமூகத்தினர் சிங்கப்பூரில் ஆழ்ந்த நீடித்து நிலைக்கக்கூடிய வகையில் வேர் விட்டு நாட்டோடு சேர்ந்து வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சிந்திக்கள் எடுத்துக்காட்டான குடிமக்களாகத் திகழ்கிறார்கள் என்றார் பிரதமர்.
சிங்கப்பூரரின் பல இன, பல சமூக அடையாளத்தை அவர்கள் தழுவிக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் சொந்த கலாசாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் அதே வேளையில், இதர சமூகங்கள், குழுக்களைப் பற்றி தெரிந்துகொண்டு இருக்கிறார்கள். இதர இனத்தவருடன் சேர்ந்து வாழ்வது, வேலை செய்து, விளையாடி மகிழ்வது ஆகியவற்றின் மூலம் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று திரு லீ கூறினார்.
கடந்த 1921ல் தோற்றுவிக்கப்பட்ட சிந்தி வர்த்தகர்கள் சங்கம் என்ற அமைப்பு பிறகு 2003ல் சிங்கப்பூர் சிந்தி சங்கம் என்று பெயர் பெற்றது. அது சிந்தி சமூகத்திற்கும் இதர குழுக்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை பேணி வளர்க்க விலைமதிப்பில்லாத பங்காற்றி இருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் சமூகத்தைப் பலப்படுத்துவதற்கும் செறிவூட்டுவதற்கும் சிந்தி சமூகமும் சிங்கப்பூர் சிந்தி சங்கமும் எடுத்து வரும் முயற்சிகளையும் தொண்டுகளையும் குறிப்பிட்டு திரு லீ நன்றி தெரிவித்தார்.

