புவாங்காக் வட்டரத்தில் திங்கட்கிழமை (மார்ச் 14) அன்று வாளைக் கையில் வைத்துக்கொண்டு மிரட்டிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்முறையில் ஈடுபடுவதற்காக அச்சுறுத்தியது, தாக்குதலுக்கு பயன்படும் ஆயுதத்தை வைத்திருந்தது ஆகியவற்றுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் விடுத்த அறிக்கையில் இதைத் தெரிவித்தனர்.
புவாங்காக் ஸ்குவேர் கடைத்தொகுதி அருகே ஆடவர் ஒருவர் வாளை வைத்திருந்தார் என்று பிற்பகல் 1.55 மணி அளவில் உதவி கோரி காவல்துறையினருக்கு அழைப்பு கிடைத்தது. .
ஆடவர் பொதுமக்களை நோக்கி வாளை வீதி அசைத்தார் என்றும் வாளால் குறைந்தது கார்களைச் சேதப்படுத்தினார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் ஐந்து பேர் ஆடவரைத் தடுத்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் ஆடவரைக் கைது செய்தனர்.
பொதுமக்கள் இருவருக்கும் வாளை வைத்திருந்த ஆடவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர் கையில் வைத்திருந்த வாளை ஆதாரமாகக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ள்ளனர். மேலும், விசாரணை நடந்துவருவதாகவும் அவர்கள் கூறினர். .
இந்நிலையில் பொதுமக்களையும் கார்களையும் பார்த்து ஒருவர் வாளை வீசி மிரட்டும் காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
அவற்றில் கையில் வாளை வைத்திருந்தபடி சாலையில் ஆடவர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அந்தப் பக்கமாக சென்ற குறைந்தது மூன்று கார்களை அவர் வாளால் தாக்கி சேதப்படுத்தினார்.
பின்னர் சாலையைக் கடக்க காத்திருந்த பயணிகளை நோக்கிச் சென்ற ஆடவர், அவர்களில் ஒருவரைத் தாக்க முயன்றபோது தடுமாறி விழுந்தார்.
அவர் தாக்கவிருந்த நபர், அவரை பலவந்தமாகப் பிடித்து அடக்க முயன்றார். உடனே மேலும் சிலர் அங்கு வந்து ஆடவரை தடுக்க உதவினர்.
பொது இடங்களில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு மூவாண்டுகள் வரை சிறை தண்டனையும் குறைந்தது ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம். .
வன்முறையில் ஈடுபடுவதற்காக அச்சுறுத்தும் நபருக்கு, ஈராண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.