2021க்கான மனிதவள அமைச்சின் தொழிலாளர் சந்தை அறிக்கை
வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், சிங்கப்பூர் தொழிலாளர் சந்தையின் மீட்சி இவ்வாண்டு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரஷ்யா-உக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையற்ற சூழலால் இது பாதிப்படையலாம்.
இவ்வாண்டு தொழிலாளர் சந்தை மீட்சியடையும் வேகம் படிப்படியான ஒன்றாக இருக்கக்கூடும். கடந்த ஆண்டு தொழிலாளர் சந்தை கணிசமாக மேம்பாடு கண்டுவிட்டதே இதற்குக் காரணம்.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட 2021க்கான தொழிலாளர் சந்தை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
இல்லப் பணிப்பெண்களைத் தவிர்த்து, கடந்த ஆண்டு ஒட்டுமொத்த வேலை நியமனம் 41,400 ஏற்றம் கண்டது. 2020ல் அது 166,600 சரிந்தது.
உள்ளூர்வாசிகளிடையே வேலை நியமனம் வலுவான வளர்ச்சி கண்டதே இதற்குக் காரணம். அது 71,300 அதிகரித்தது. உள்ளூர்வாசிகள் அல்லாதோரிடையே வேலை நியமனம் 30,000 குறைந்தது என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
ஓமிக்ரான் சூழலிலும் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் வேலை நியமனம் பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை 47,900 கூடியது.
வேலை நியமனம் பெற்ற சிங்கப்பூர்வாசிகள் அல்லாத ஊழியர்களின் எண்ணிக்கை ஈராண்டுகளில் முதன்முறையாக அதிகரித்தது.
கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதால் வெளிநாட்டு ஊழியர்களின் வருகை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
சிங்கப்பூர்வாசிகளிடையே வேலை நியமன போக்கு மாறுபட்டு இருந்ததை அமைச்சு தரவு காட்டியது. தகவல் தொடர்பு, சுகாதார சமூகச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள், நிர்வாக ஆதரவுச் சேவைகள், நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் வேலை நியமனம் அதிகரித்தது.
என்றாலும், ஹோட்டல், விமானப் போக்குவரத்து, கலைகள், பொழுதுபோக்கு, கேளிக்கை துறைகளில் வேலை நியமனம் மிதமாகக் குறைந்தது. கடந்த ஆண்டின் பெரும்பகுதி பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்ததே அதற்குக் காரணம்.
இதற்கிடையே, கட்டுமானம் தவிர்த்து மற்ற துறைகளில் சிங்கப்பூர்வாசிகள் அல்லாதோரிடையே வேலை நியமனம் குறைந்தது. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கட்டுமானத் துறையில் மட்டும் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் வேலை நியமனம் கூடியது.
எம்பிளாய்மண்ட் பாஸ் வைத்திருந்தோரின் எண்ணிக்கை 15,300ம் எஸ்-பாஸ் வைத்திருப்போரின் எண்ணிக்கை 12,200ம் குறைந்ததே கட்டுமானம் தவிர்த்து மற்ற துறைகளில் வேலை நியமனம் குறையக் காரணம்.
வேலை அனுமதிச் சீட்டு, இதர வேலை அனுமதி அட்டை வைத்திருந்தோர் எண்ணிக்கை 2,400 குறைந்துள்ளது. இருப்பினும், இது குறைவான எண்ணிக்கையே.

