உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்மீது ரஷ்யப் படை நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். தலைநகரின் வேறொரு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டாவது நபர் கொல்லப்பட்டார் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
கியவ்வில் உள்ள விமானத் தொழிற்சாலையில் மூன்று ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதில் அது தீப்பற்றிக்கொண்டது.
குடிமக்களைக் குறிவைத்து தாக்குவதாகக் கூறப்படுவதை ரஷ்யா நிராகரித்துள்ளது. உக்ரேனில் தான் மேற்கொள்வது 'சிறப்பு நடவடிக்கை' என்று ரஷ்ய அதிபர் மாளிகை வர்ணிக்கிறது. எனினும், போர் தொடுப்பதற்கு இது அடிப்படை ஆதாரமற்ற காரணம் என்று உக்ரேனும் மேற்கத்திய நட்பு நாடுகளும் கூறுகின்றன.
உக்ரேனில் ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்திவரும் வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே நான்கு சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது.
துறைமுக நகரான மரியபோலிலும் ரஷ்யப் படைகள் இடைவிடாது குண்டுமழை பொழிந்து வருகின்றன. அந்நகரில் மட்டும் கிட்டத்தட்ட 2,200 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது.
குறிப்பிட்ட சில விஷயங்களைப் பற்றி பேச அத்தகைய ஒரு சந்திப்புக்கு ரஷ்ய அதிபர் மாளிகை மறுப்பு தெரிவிக்காது என ரஷ்யா முன்னதாகக் கூறியிருந்தது. என்றாலும், அதுகுறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
நேட்டோ உறுப்பு நாடான போலந்து எல்லை அருகே உள்ள உக்ரேனிய ராணுவத் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா நேற்று முன்தினம் நடத்தியது. அதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதுடன் 134 பேர் காயமுற்றனர். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் இணக்கம் தெரிவித்து இருந்தாலும், போரில் சரணடைய மறுத்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரேனைவிட்டு வெளியேறியுள்ளனர். ரஷ்யா-உக்ரேன் பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக திரு புட்டின் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். ஆனால், அதுபற்றி அவர் விவரிக்கவில்லை.
மேலும் செய்திகள் பக்கம் 8ல்

