வாள் ஏந்திய ஆடவரை முன்னதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது

வாள் ஏந்திய ஆடவரை முன்னதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது

1 mins read
ee37f837-9734-4a82-9002-3ef1349dce25
ROADS.SG/ஃபேஸ்புக், வாட்ஸ்அப் காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் -

புவாங்காக் வட்டாரத்தில் வாள் ஏந்திய ஆடவரை, பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக உள்நாட்டு பாதுகாப்புத் துறை முன்னதாக விசாரணைக்கு உட்படுத்தி இருந்தது. ஆனால், அவர் பயங்கரவாத போக்கிற்கு ஆளானது கண்டறியப்படவில்லை.

ஃபடில் யூசோப், 37, எனும் அந்த ஆடவரிடம் விசாரணை நடத்த காவல்துறையுடன் சேர்ந்து தான் பணியாற்றி வருவதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) தெரிவித்தது.

ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக நாளை புதன்கிழமை (மார்ச் 16) ஃபடில் மீது குற்றஞ்சாட்டப்படும்.

"ஃபடில் தனியாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. இது பயங்கரவாதச் செயல் என்பது முதற்கட்ட விசாரணை இதுவரை குறிப்பிடவில்லை," என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியது.

"வாளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, தெரியாத சில மாத்திரைகளை அவர் உட்கொண்டதாகத் தெரிகிறது," என்றும் அது சொன்னது.

புவாங்காக் கிரசெண்ட்டில் சாலையின் நடுவே வாளை வீசியபடி ஆடவர் ஒருவர் இருந்ததாகக் கூறி திங்கட்கிழமை பிற்பகல் 1.56 மணிக்கு காவல்துறை அழைப்பு வந்ததாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியது.