உக்ரேனில் கடந்த 20 நாள்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் நேற்று இரவு 9 மணி அளவில் (பத்திரிகை அச்சுக்குச் சென்றபோது) தலைநகர் கியவ்வை நேற்று சுற்றி வளைத்துவிட்டன.
தலைநகரைக் கைப்பற்ற தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் என்று நாட்டின் முக்கிய கட்டடங்கள் மீதும் ஷெல் குண்டுகளை வீசுகின்றன.
கியவ்விலுள்ள 16 மாடிக் குடியிருப்பு கட்டடத்தின் மீது நேற்று முன்தினம் குண்டு போடப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டனர், குறைந்தது 27 பேர் மீட்கப்பட்டனர் என்று உக்ரேன் அவசரகால சேவை படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது (படம்). அப்பகுதியிலுள்ள மற்றோர் அடுக்குமாடியும் தாக்குலுக்குள்ளானது. கியவ்வில் நாளை வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நகரின் மூன்று மில்லியன் மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் நகரை விட்டு வெளியேறி விட்டனர்.தலைநகரின் தெற்கே உள்ள சாலைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் சேமித்து வைக்கின்றனர்.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பலன் தருவதாகத் தெரிய வில்லை. மேற்கிலிருந்து விலகி, ரஷ்யாவின் ஆதரவுடன் பிரிந்த பகுதிகளை உக்ரேன் அங்கீகரிக்க வேண்டும் என்கிறது ரஷ்யா. "அமைதி, உடனடி போர்நிறுத்தம், ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டும்" என்கிறது உக்ரேன்.
ரஷ்யாவுக்கும், அதிபர் புட்டினுக்கும் பல நாடுகள் கடுமையான தடைகளை விதித்து, எதிர்ப்பையும் தெரிவித்து வரும் நிலையிலும் போர் தொடர்கிறது.
மேலும் செய்திகள் பக்கம் 8

