உக்ரேனும் ரஷ்யாவும் சமரசப் பேச்சு நடத்தி வருவதாகவும் அதில் அமைதிக்கான நம்பிக்கை அதிகமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்காலிக ஏற்பாடாக 15 அம்ச அமைதித் திட்டம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் பேரில் உக்ரேனும் ரஷ்யாவும் பேச்சு நடத்தி வருகின்றன. அந்தப் பேச்சில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் நேற்று தெரிவித்தது.
உக்ரேன் நடுநிலையைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து தனது ஆயுதப்படைகளுக்கு வரம்பு விதிக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், ரஷ்யா தன் படைகளை மீட்டுக்கொள்ளும். போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என்ற ஏற்பாடு அந்த 15 அம்சத் திட்டத்தில் இருக்கிறது என்று பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை மேற்கோள்காட்டி ஃபைனான்ஷியல் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.
நேட்டோ அமைப்பில் சேர்வதற்கான தனது விருப்பத்தை உக்ரேன் கைவிட்டுவிடும்; அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி போன்ற நேச நாடுகளின் பாதுகாப்புக்குக் கைமாறாக எந்தவொரு வெளிநாட்டு ராணுவத் தளத்தையும் அல்லது ஆயுதங்களையும் உக்ரேன் வைத்துக்கொள்ளாது என்பதும் அந்த அமைதித் திட்டத்தின் அம்சங்களாக இருக்கின்றன.
அமைதிப் பேச்சின் முக்கிய உலக நடுவராக இஸ்ரேலியப் பிரதமர் பென்னட் உதவி வருவதாகவும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இவர் மார்ச் 5ஆம் தேதி திடீரென ரஷ்ய பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இரு தரப்பினரோடும் பேச்சு நடத்தி வருகிறார்.
15 அம்ச அமைதித் திட்டம் பற்றிய தகவல் வெளியாகி இருந்தாலும் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் சாத்தியமான அமைதி உடன்பாடு பற்றி இப்போது எதையும் சொல்வதற்கில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகைப் பேச்சாளர் டிமிட்ரி செகோவ் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை பற்றி கருத்துக் கூறிய உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, அவை நடைமுறைக்கு உகந்த நிலையை எட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இப்போது விவாதிக்கப்படும் யோசனைகள் கிட்டத்தட்ட உடன்பாட்டை நெருங்கிவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறினார்.
இவ்வேளையில், உக்ரேன் மீது பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி படையெடுத்த ரஷ்யா, கடும் எதிர்த் தாக்குதல் காரணமாக வேகமாக வெற்றியைச் சாதிக்க முடியவில்லை என்று பிரிட்டிஷ் ராணுவ வேவுத்துறை நேற்று குறிப்பிட்டது. ரஷ்யாவின் ஊடுருவல் பல முனைகளிலும் கிட்டத்தட்ட நிலைகுத்திப் போய்விட்டது. ரஷ்யப் படைகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. தரை, கடல், ஆகாயம் வழியாக ரஷ்ய ராணுவம் எளிதாக முன்னேற முடியவில்லை என்று அது கூறியது.
உக்ரேன் கடுமையாக எதிர்க்கிறது. ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைப்பு தெரிவித்தது.
உக்ரேனின் பெரும் பகுதிகளும் பெரும் நகர்களும் இன்னமும் உக்ரேனின் கைகளிலேயே இருப்பதாக பிரிட்டிஷ் ராணுவ வேவுத்துறை குறிப்பிட்டது.
இதனிடையே, உக்ரேனில் ரஷ்யா நடத்தும் தாக்குதலால் ஏற்பட்ட பேரழிவுகளை, உயிருடற்சேதத்தை தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புட்டின் ஒரு போர்க் குற்றவாளி என்று கூறினார். அமெரிக்க அதிபர் இப்படி கூறியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கம் 8ல் மேலும் செய்தி

