அங் மோ கியோவில் டான் டோக் செங் மருத்துவமனை தொடங்கியது
டான் டோக் செங் மருத்துவமனை, அங் மோ கியோ அவென்யூ 8ல் புதிய நிலையம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் அப்பகுதி குடியிருப்பாளர்
களுக்கு நிபுணத்துவ மருத்துவ வல்லுநர்களின் சிகிச்சையும் பராமரிப்பும் இனி கிடைக்கும். நேற்று நடைபெற்ற அந்தப் புதிய சிறப்பு மருத்துவப் பராமரிப்பு நிலையத் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
இந்த நிலையம், நிபுணத்துவ மருத்துவ வல்லுநர்களின் பராமரிப்பையும் சேவைகளையும் குடிமக்களின் வீட்டருகே கொண்டுவந்துள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவப் பராமரிப்பு கிடைக்குமாறு செய்வது இதன் நோக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
"அங் மோ கியோவில் வசிக்கும் முதியவர் யாருக்காவது கண்பார்வை மங்கிவிட்டால் அவர் பரிசோதனைக்காக, ஆலோசனைக்காக, சிகிச்சைக்காக, தொடர் கவனிப்புக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
"இப்போது புதிய நிலையம் திறக்கப்பட்டு இருப்பதால் அவர், தான் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே மருத்துவச் சிகிச்சையை, கண் அறுவைச் சிகிச்சையை, சிகிச்சைக்குப் பிந்திய பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும்," என்றும் திரு லீ கூறினார்.
ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு உத்தியையும் கொள்கை
களையும் அரசாங்கம் தொடர்ந்து மறுஆய்வு செய்துவருவதாகவும் புதிய, சிறந்த வசதிகளை ஏற்
படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பெருங்குடல் பரிசோதனை, வயிறு பரிசோதனை, எலும்பு தொடர்பான உடற்பயிற்சி மறுவாழ்வு சிகிச்சை உள்ளிட்ட இதர சிகிச்சை வசதிகளும் புதிய நிலையத்தில் கிடைக்கும்.
நீரிழிவு சிகிச்சை, கண் சிறப்பு அறுவை சிகிச்சை, காது கேளாமை தொடர்பான பிரச்சினைகளுக்கான சிகிச்சை ஆகிய, தனது மூன்று மருந்தகங்களில் கிடைக்கக்கூடிய முக்கியமான சிகிச்சை வசதிகளை தான் திருத்தி வடிவமைத்து இருப் பதாக டான் டோக் செங் மருத்துவமனை கூறியது.
இதனை அடுத்து அந்த சிகிச்சைகளை அங் மோ கியோ குடியிருப்பு வட்டார மக்கள் புதிய நிலையத்தில் எளிதாகப் பெறலாம்.
அவை அவர்களுக்குக் கட்டுப் படியாகக்கூடியதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று மருத்துவமனை கூறியது.
டான் டோக் செங் மருத்துவமனை ஊழியர்கள் இந்தப் புதிய நிலையத்தை நிர்வகிப்பார்கள். அவர்களில் சிலர் இந்த நிலையத்திலும் நொவினாவில் உள்ள இந்த மருத்துவமனையிலும் மாறி மாறி பணியாற்றுவர்.
சிங்கப்பூரில் 'நலமிக்க எஸ்ஜி' என்ற ஓர் உத்தி பற்றி அண்மையில் அறிவிக்கப்பட்டது. மருத்துவ மனையை அதிகம் சார்ந்து இருக்காமல் முன்னரே நோய்களைத் தவிர்த்துக்கொள்ளக்கூடிய, தாக்குப் பிடிக்கக்கூடிய ஒரு பராமரிப்பு பாணிக்கு மாறிக்கொள்ள இந்த உத்தி வகை செய்கிறது.
இந்த உத்தியை ஒட்டி மக்களின் உடல்நலனை நிர்வகிப்பதில் பலதுறை மருந்தகங்களையும் தனியார் மருத்துவர்களையும் இந்தப் புதிய நிலையம் அதிகம் ஈடுபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

