அச்சுத்தாள் வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் பள்ளித் தேர்வுகள் ரத்து

அச்சுத்தாள் வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் பள்ளித் தேர்வுகள் ரத்து

2 mins read
efbee088-19c1-474d-aa11-90cafc8c1020
இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடியை எதிர்த்து வெள்ளிக்கிழமை (மார்ச் 18) அன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள். படம்: ஈபிஏ -

இலங்கையில், அச்சுத்தாளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் பள்ளி ஆண்டிறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் மேற்கு மாநிலத்தில் பல மில்லியன் பள்ளி மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட உள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க இருந்த தேர்வுகள் ரத்து காலவரையறை இன்றி செய்யப்பட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

போதுமான நாணயச் செலாவணி இல்லாததால் அச்சு நிறுவனங்களால் அச்சுத்தாள்கள், மை ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று மேற்கு மாநிலத்தின் கல்வித் துறை தெரிவித்தது.

அதனால் பள்ளி முதல்வர்களால் தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று அது கூறியது.

இலங்கையில் 4.5 மில்லியன் மாணவர்கள் உள்ளனர்.

அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தேர்வு எழுத முடியாமல் போகலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

மற்ற மாநிலங்களில் பள்ளி ஆண்டிறுதித் தேர்வுகளை நடத்துவதில் பிரச்சினை இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளியல் நெருக்கடி அதிகமாகி வருகிறது.

எரிசக்தி ஆலைகள் மூடப்படுவதால் மின்வெட்டுகளும் தொடர்ந்து வருகின்றன. இதனால் சிறிய வர்த்தகங்கள் முடங்கியுள்ளன.

அதே போல பால் பவுடர் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிடம் ஒரு பில்லியன் டாலர் கடன் பெற்ற இலங்கை சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது.

கடன் தவணையைக் கட்ட சீனாவிடம் அது கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களை வாங்க கூடுதல் கடனையும் அது கேட்டுள்ளது.

அனைத்துலகப் பண நிதியத்தின் உதவிபெற அதனுடன் இலங்கை அரசாங்கம் பேச்சு வார்த்தையும் நடத்தவுள்ளது.