போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிரான சிங்கப்பூரின் பரந்த அளவிலான உத்தி வெற்றிகரமானதாக இருந்து வந்துள்ளது என்று இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து இருக் கிறார். அந்த உத்தி காரணமாக சிங்கப்பூரில் போதைப்பொருள் நிலவரம் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.
ஐநா போதைப்பொருள் ஒழிப்பு ஆணையத்தின் 65வது கூட்டத்தில் நேற்று மெய்நிகர் வாயிலாகப் பேசிய திருவாட்டி டியோ, சிங்கப்பூரின் உத்தியில் வலுவான சமூக பங்காளித்துவமும் பொதுமக்கள் ஆதரவும் முக்கிய அம்சமாக பின்னிப்பிணைந்து இருப்பதாகக் கூறினார்.
முன்தடுப்பு போதனை, கடுமையான சட்டங்கள், தீவிரமாக சட்டங்களை அமலாக்குவது, ஆற்றல் மிகுந்த மறுவாழ்வு முயற்சிகள் ஆகியவற்றின் வழியாக போதைப்பொருள் விநியோகத்தையும் அதற்கான தேவையையும் குறைப்பதே சிங்கப்பூர் உத்தியின் நோக்கம் என்று அவர் விளக்கினார்.
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் மார்ச் 14 முதல் 18ஆம் தேதி வரை அந்த ஐநா ஆணைய நிகழ்ச்சி நேரடியாகவும் இணையம் வழியும் நடந்தது. தொடர்பு தகவல் அமைச்சருமான திருவாட்டி டியோ அதில் கலந்துகொண்ட சிங்கப்பூர் குழுவிற்குத் தலைமை ஏற்றார்.
சிங்கப்பூரில் பெரும்பாலான இளையர்கள்- அதாவது ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் போதைப்பொருளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றி புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
போதைப்பொருள் புழக்கத்தை அறவே சகித்துக்கொள்வதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு அவர்கள் ஆதரவு தருகிறார்கள் என்பது மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அண்மையில் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்திருக்கிறது. இதனை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் 1990களில் ஒவ்வோர் ஆண்டும் கைதான போதைப்புழங்கி களின் எண்ணிக்கை 6,000க்கும் அதிகமாக இருந்தது. இது இன்றைய தேதியில் கிட்டத்தட்ட 3,000 ஆகக் குறைந்து இருக்கிறது என்பதையும் திருவாட்டி டியோ சுட்டினார். போதைப் புழக்கத்தைக் கைவிட்டு விட்டு மீண்டும் அந்தப் பழக்கத்திற்குத் திரும்புவோரின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது என்றார் அவர்.
திருவாட்டி டியோ போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான சிங்கப்பூரின் பலமுனை உத்தியை தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.
உலகளவிலான போதைப்பொருள் பிரச்சினை இன்னமும் ஒரு சவாலாகவே நீடிக்கிறது என்று குறிப்பிட்ட திருவாட்டி டியோ, அந்தச் சவாலைச் சமாளிக்க வேண்டுமானால் பல நாட்டு அரசாங்கங்களும் உள்நாட்டு, அனைத்துலக முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார். ஐநா போதைப்பொருள் ஒழிப்பு ஆணையத்தில் 2024 முதல் 2027 வரை உறுப்பினராக இருக்க சிங்கப்பூர் முயற்சி செய்கிறது. இதற்கு ஆதரவு அளிக்கும்படி உறுப்பினர்களை திருவாட்டி டியோ கேட்டுக்கொண்டார்.

