மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் நடத்து வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அவரது அம்னோ கட்சியின் தலைமை பொதுத்தேர்தலை நடத்த விரும்புகிறது.
அண்மைய நான்கு நாள் கட்சி மாநாட்டில் பேசிய அம்னோ தலைவர்கள் பலர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் அம்னோ கட்சியின் உதவித் தலைவருமான பிரதமர் இஸ்மாயில், 5,500 கட்சிப் பேராளர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை நன்கு அறிந்து உள்ளதாகத் தெரிவித்தார்.
"இந்த முக்கிய விவகாரம் கட்சியின் ஐந்து உயர் மட்டத் தலைவர்களுடன் விவாதிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்," என்றார் அவர்.
அம்னோ கட்சித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடி, துணைத் தலைவர் முஹமட் ஹசன் மற்றும் அவர் உட்பட மூன்று உதவி தலைவர்களை அவர் குறிப்பிட்டு பேசினார்.
இதே விவகாரம் அம்னோ உச்ச மன்றத்திலும் அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும். பின்னர் அது பற்றிய முடிவு மாமன்னரிடம் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
திரு இஸ்மாயில் ஏழு மாதங்களே ஆன அரசாங்கத்துக்கு தலைமை வகித்து வருகிறார்.
இதற்கு முன்பு பொதுத்தேர்தல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் கட்சி மாநாட்டில் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்ததால் அதற்கு அவர் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திரு இஸ்மாயில் பேராளர்களிடம் உரையாற்றியபோது தேர்தல் பற்றி குறிப்பிடாமல் அரசாங்கத்தின் புதிய முதலீடுகள் மற்றும் புதிய கொள்கைகளைப் பற்றியே பேசினார்.
அடுத்த ஆண்டு ஜூலை வரையில் பொதுத் தேர்தல் நடத்த அரசுக்கு அவகாசம் உள்ளது.

