முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் எல்லைகளைத் திறந்துவிட சிங்கப்பூர் தயாராகிறது. இந்நிலையில் இங்கு வரும் அனைத்துலகப் பயணிகளின் வருகை ஏறுமுகமாக உள்ளது.
இருந்தாலும்கூட பயணத்துறை கணிசமான அளவிற்கு மீட்சிஅடைவதை எதிர்நோக்கி இந்தத் துறையினர் காத்துள்ளனர்.
'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப்பாதை ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூருக்கு வருவோரில் சுற்றுப் பயணிகள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள்.
நண்பர்களையும் உறவினர்களையும் பார்ப்பதற்காக வருவோரே அவர்களில் அதிகம்.
இப்படி வருவோர், சுற்றுலாத் துறையில் செலவிடும் தொகை மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதை இந்தத் துறையினரும் கவனிப்பாளர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிங்கப்பூருக்கு கடந்த ஜனவரியில் ஏறத்தாழ 57,000 பேர் வந்தனர். சென்ற மாதம் வந்த அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை 67,760 என்று சிங்கப்பூர் பயணத் துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறியதாக அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
விடிஎல் விமானப் பயணத் திட்டத்தின்கீழ் குறுகியகால பயணிகளுக்காக 210,000க்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதை திரு டான் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூருக்கு குறுகிய கால வருகை மேற்கொள்ள அதிகமானோர் விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கொவிட்-19 தொற்றியதற்கு முன்பு வந்த பயணிகளின் அளவில் குறைந்தபட்சம் பாதி அளவை இந்த ஆண்டில் எட்டிவிடவேண்டும் என்பதே தனது இலக்கு என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
இந்த உத்தித் திட்டத்தின் முக்கிய அங்கமாக, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சிங்கப்பூர் வருவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரையும் மற்ற நாடுகள் ஏற்கெனவே வரவேற்கத் தொடங்கிவிட்டன என்று திரு டான் குறிப்பிட்டார்.
மேலும், அதிகமான சுற்றுப் பயணிகள் வருகைக்கு பல முனைகளிலும் பயணத் துறைக் கழகம் ஆயத்தமாகி வருவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், இதுபற்றிக் கருத்து கூறிய சிங்கப்பூர் தேசிய பயண முகவர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் லெர், அதிகமானோர் சிங்கப்பூர் வர விடிஎல் ஏற்பாடு அனுமதிக்கிறது என்றார்.
இருந்தாலும் உள்நாட்டுக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த வேண்டிய தேவை இருக்கிறது என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

