உக்ரேனில் ரஷ்யா தாக்குதலை அதிகப்படுத்தி இருக்கிறது.
உக்ரேனியப் படைகள் கடும் எதிர்ப்பைக் கொடுத்து வருகின்றன. இதனால் அந்த நாட்டில் மனிதாபிமானப் பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதாக தகவல்கள் கூறின.
முற்றுகையிடப்பட்டு உள்ள துறைமுக நகரான மரியபோலில் நுழைய ரஷ்யா தாக்குதலை வேகப்படுத்தியது. அதேவேளையில், மேற்கு உக்ரேனில் ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணைகள் வெடித்து பாதாள ராணுவ வெடிமருந்துக் கிடங்கு நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேன் முழுவதுமே போர் மூர்க்கமடைந்துவிட்டதாகவும் அந்த நாட்டில் உயிருடற்சேதம் அதிகரிப்பதால் மனிதாபிமானப் பிரச்சினைகள் மோசமடைவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
மைகோலாய் என்ற நகரில் எறிபடைகளைக் கொண்டு வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த நகரில் ரஷ்யா நேற்றும் தொடர்ந்து விமானத் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்திவிட்டு அரசதந்திர தீர்வை எட்ட ஆதரவு தரும்படி ரஷ்யாவுக்கு நேரடியாகக் கோரிக்கை விடுத்தார்.
அதோடு, அவர் ரஷ்யாவைக் கடுமையாக எச்சரித்தார். உக்ரேன் போரில் 14,000 ரஷ்யப் படைவீரர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், மரியபோல் நகரில் ரஷ்யப் படைவீரர்கள் நடத்திய தாக்குதலில் ஐரோப்பாவின் ஆகப் பெரிய இரும்பு எஃகு ஆலைகளில் ஒன்று படுமோசமாக சேதமடைந்துவிட்டது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அந்த ஆலை தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளிகளை லிஸ்சியா என்ற உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
இதனிடையே, கருங்கடல், காஸ்பியன் கடலில் நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பல்களில் இருந்து உக்ரேனை நோக்கி ரஷ்யா குருஸ் ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
கிரைமியா ஆகாயவெளியில் இருந்தும் ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
உக்ரேனிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து சனிக்கிழமை இரவும் பிறகு நேற்றுக் காலையும் ரஷ்ய படைகள் கின்ஸால் என்ற ஒலியைவிட வேகமாகப் பாயும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதாக மாஸ்கோ தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் இகோர் கோனாஷென்கோவ் கூறினார்.
உக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு மாறி இருக்கிறார்கள்.
உக்ரேன் நிலவரம் மோசமாகி உலகின் மாபெரும் வல்லரசுகளான ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் அதிகமாகி வருகிறது.
"அமெரிக்கா, உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவை மிரட்டி வருகிறது. உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டி இருக்கிறது.
"இதனால் உக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை தேவைப்படுகிறது," என்று ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்து வருகிறார்.
உக்ரேனில் ராணுவத் தாக்கு தலைக் கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளியல் தடைகளை விதித்து வருகின்றன.
மேலும் செய்தி பக்கம் 8ல்

