ரஷ்யாவுடனும் மேற்கத்திய நாடு
களுடனும் இந்தியா தனது உறவைத் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
நான்கு நாடுகள் கொண்ட குழு அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்று உள்ளன. உக்ரேன் மீது படையெடுத்த ரஷ்யாவைக் கண்டிக்கும் விதமாக இந்தியாவைத் தவிர மற்ற மூன்று நாடுகளும் ரஷ்யா மீது பொருளியல் தடைகளை அறிவித்தன.
ஆனால், இந்தியா அப்படி எதுவும் செய்யவில்லை. உக்ரேனில் வன்செயல் முடிவுக்கு வரவேண்டும் என்று கூறிய இந்தியா, படையெடுப்பைக் கண்டிக்கவில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பெயரைக் குறிப்பிடாமல், "அவரது படையெடுப்புக்கு எதிராக நேட்டோவும் பசிபிக் நாடுகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன. நான்கு நாடுகள் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவின் நிலைப்பாடு சற்று உறுதி யற்றதாக உள்ளது," என்றார்.
இந்நிலையில், உக்ரேன் மீது ஆபத்தான ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி மாஸ்கோ பரிசீலித்து வருவதாக திரு பைடன் எச்சரித்துள்ளார். ஆயினும் அது குறித்த ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை.

