சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிகையில், வேலையிடத்திலும் வேலை தேடும்போதும் உணரப்பட்ட பாரபட்சம் இப்போது குறைந்து உள்ளதாக சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தெரிவித்தனர்.
வேலையிடத்தில் பாரபட்சம் இருப்பதாக தெரிவித்த இந்த ஊழியர்களின் விகிதம் 2018ல் 24% ஆக இருந்தது. சென்ற ஆண்டில் அது 8% ஆகக் குறைந்துவிட்டது.
மனிதவள அமைச்சு நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இந்த நிலவரம் தெரியவருகிறது.
வேலை தேடும்போது பாரபட்சப் போக்கு இருப்பதாகக் கூறிய ஊழியர்களின் விகிதம் 43%லிருந்து 25% ஆகக் குறைந்துவிட்டது.
மனிதவள அமைச்சு சென்ற செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடத்திய அந்த ஆய்வில் ஏறத்தாழ 3,000 பேர் கலந்துகொண்டு பல கேள்விகளுக்கும் இணையம், அஞ்சல், மின்னஞ்சல், தெலைப்பிரதி வழி பதில்களைக் கூறினர்.
வேலை தேடும்போதும் வேலை இடத்திலும் வயதுதான் பொதுவான பாரபட்சமாக இருக்கிறது.
வேலையிடத்தில் பாரபட்சம் அனுபவித்த ஐவரில் நால்வர் அச்சம் காரணமாக அதுபற்றி வெளியே சொல்லாமல் அமைதி காத்துவிட்டனர். மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனத்திடம் அல்லது தொழிற்சங்கத்திடம் உதவி நாடினர். 16% தங்கள் குடும்பத்தில் இருந்து சாதாரண முறையில் உதவியை நாடினார்கள். 5%க்கும் குறைவானவர்கள் முத்தரப்பு அமைப்புகளை நாடினர்.
கர்ப்பம் அடிப்படையிலான பாரபட்சம் ஆக அதிகமாகக் குறைந்துவிட்டது.
இதனிடையே, இது பற்றி நேற்று விளக்கம் அளித்த மனிதவள அமைச்சின் வேலையிட கொள்கை, உத்திப் பிரிவின் வட்டார இயக்குநர் லீ சுங் வெய், பாரபட்ச போக்கு குறைந்துள்ளதற்கு, நியாயமான வேலையிட நடைமுறைகள் பற்றிய புரிந்துணர்வு அதிகரித்துள்ளதும் தொழிலாளர் சந்தை இறுக்கமாக இருப்பதும் காரணங்கள் என்றார்.
வேலை தேடும்போது மனநல நிலவரம் அடிப்படையில் பாரபட்சம் எப்படி காட்டப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய ஆய்வில் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. வேலை தேடியோரில் மன நலன் தொடர்பில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்தவர்கள் 3%க்கும் குறைவு.

