ரஷ்யாவை ஜி20 அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஜி20 நாடுகளிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போரில், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை திரு விளாடிமிர் புட்டின் பயன்படுத்தலாம் என்ற எச்சரிக்கையையும் அவர் நேற்று முன்தினம் பிரஸ்சல்சில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் விடுத்தார்.
மேலைநாடுகளுடன்தான் சீனாவின் பொருளியல் எதிர்காலம் என்பதை சீனா அறிந்திருப்பதாகவும் திரு பைடன் குறிப்பிட்டார்.
இதனால், உக்ரேனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் பக்கம் சீனா சாய்ந்தால், அது வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமையாகிவிடும் என்ற எச்சரிக்கையையும் திரு பைடன் சீனத் தலைவரான ஸி ஜின்பிங்குக்கு விடுத்ததாகக் கூறப்பட்டது.
"நான் மிரட்டவில்லை. ஆனால் தெளிவாகக் கூறிவிட்டேன். ரஷ்யாவுக்கு உதவுவதன் விளைவுகளை அவர் புரிந்துகொண்டிருப்பதைத்தான் நான் உறுதிப்படுத்தினேன்," என்று நேற்று திரு ஸியுடன் தொலைபேசிவழி தொடர்புகொண்டு பேசியது குறித்துத் தெரிவித்தார் அவர்.
புட்டின் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ அமைப்பு நாடுகள் தக்க எதிர்நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
வரும் ஆண்டுகளில் சுமார் 100,000 உக்ரேனிய அகதிகளை வரவேற்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் திரு பைடன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரேனியப் படைகள் உக்கிரமாகத் திருப்பித் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரேன் தலைநகர் கியவ்வுக்கு மேற்கே உள்ள நகரங்களை ரஷ்யப் படைகளிடமிருந்து உக்ரேனியப் படைகள் மீட்டிருக்கலாம் என்று பிரிட்டன் நேற்று தெரிவித்தது.
போர்த் தாக்குதல் தொடங்கி ஒரு மாதமாகிவிட்ட நிலையிலும் உக்ரேனில் பெரும் நகர் எதையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
உக்ரேனிய நகரங்கள் மீது குண்டு வீசுவதும் அவற்றைச் சுற்றி வளைப்பதுமாகவே ரஷ்யப் படைகள் இந்த ஒரு மாதத்தைத் தள்ளுகின்றன.
கூடுதல் செய்தி - பக்கம் 9

