அண்மைய சில நாள்களாக போதைப் புழங்கிகளுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களால் யாரும் மோசமாகக் காயமடை
யாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக போதைப்பொருள்
ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
இம்மாதம் 23ஆம் தேதியன்று புளோக் 33 பெண்டமியர் சாலையில் கத்தியை ஏந்திக்கொண்டு காவல்துறையினரைத் தாக்க அவர்களை நோக்கி விரைந்த 64 வயது இங் எங் குயியை காவல்துறை அதிகாரி சுட்டுக்கொன்றார்.
துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு டேசர் சாதனத்தை அதிகாரிகள் முதலில் பயன்படுத்தினர். ஆனால் அதற்கும் அடங்காமல் தொடர்ந்து காவல்துறை அதிகாரி களை நோக்கிச் சென்ற இங், துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டது. அதிகாரிகள் அவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் பலருக்குப் புரிந்துள்ளபோதிலும் உயிர் போகும் அளவுக்குத் துப்பாக்கியால் சுடாமல் வெறும் காயத்தை ஏற்
படுத்த காவல்துறையினர் ஏன் சுடவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளதை சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சுட்டினார்.
"யாருக்கும் மிகக் கடுமையான காயங்கள் அல்லது மரணம் ஏற்
படாமல் இருக்க உயிருக்கு மிரட்டல் விடுப்பவருடைய உடலின் நடுப்பகுதியில் துப்பாக்கியால் சுட காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் குறி தப்பு வதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அத்துடன் அப்பாவி வழிப்போக்கர்கள் காயம் அடைவதை இது தடுக்கிறது," என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
பெண்டமியர் சாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் கத்தியைக் கீழே போடும்படி காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டும் அதைப் புறக்கணித்து அந்த ஆடவர் தொடர்ந்து அதிகாரிகளை நோக்கி விரைந்ததாக திரு சண்முகம் கூறினார்.
"அந்த ஆடவர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் தேடப்பட்டவர். அவர் ஒரு போதைப் புழங்கி. போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் கருவி என்று நம்பப்படும் பொருள் ஒன்று அவரது வீட்டில் கண்டெடுக்கப் பட்டது. அதுமட்டுமல்லாது,
பல்வேறு குற்றங்கள் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வேண்டுமென்றே காவல்துறை அதிகாரிக்குக் காயம் விளைவித்ததும் அதில் அடங்கும்,"
என்றார் திரு சண்முகம்.

