இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்துவரும் வேளையில், தள்ளுபடி விலையில் கூடுதல் ரஷ்ய எண்ணெயை இந்திய அரசாங்கம் வாங்கவிருப்பதாகத் தெரிகிறது.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் பயனீட்டாளராகவும் இறக்குமதியாளராகவும் இந்தியா விளங்குகிறது. தனது எண்ணெய் தேவையில் 80 விழுக்காட்டை இந்தியா இறக்குமதி செய்கிறது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளியல் தடைகளை விதித்துள்ளன. இவ்வேளையில், இந்திய நிறுவனங்களுக்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்கிறது மாஸ்கோ.
இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம், மூன்று மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் இரண்டு மில்லியன் பீப்பாயும் நயாரா எனர்ஜி 1.8 மில்லியன் பீப்பாயும் ரஷ்ய எண்ணெய் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியாவுக்கு விற்கப்படும் ரஷ்ய எண்ணெயின் விலை தெரிவிக்கப்படவில்லை. எனினும், பீப்பாய்க்கு USD25 முதல் USD30 விலைத் தள்ளுபடி வழங்கப்படுவதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
ரஷ்ய என்ணெய் வாங்குவதன் தொடர்பில் இந்தியா அதன் நிலைப்பாட்டைத் தற்காத்து பேசுகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவைத் தொடர்ந்து வாங்குவதை அது சுட்டியது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 24) நாடாளுமன்றத்தில் பேசினார்.
“ரஷ்யாவிடம் இருந்து நாங்கள் மிகவும் குறைந்த அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். நாங்கள் செய்வதைவிட பல நாடுகள் 10, 15 முதல் 20 மடங்கு அதிக எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்கின்றன. ஆனால் அவை எங்களுக்கு பாடம் புகட்டுகின்றன,” என்றார் அவர்.
ஜெர்மனி, பல்கேரியா, கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்குகின்றன.