மனநலக் கழகம் திருத்தி அமைக்கப்படுகிறது. அங்கு இருக்கும் சில பழைய வார்டுகள் புதுப்பொலிவைப் பெறுகின்றன. அதோடு மட்டுமின்றி, அந்தக் கழகத்தின் ஒருமித்த கவனமும் மாற்றம் காண்கிறது.
மனநல பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பது இப்போது இந்தக் கழகத்தின் இலக்காக இருக்கிறது.
இதையொட்டி கழகத்தில் உருமாற்றம் இடம்பெறுகிறது. மனநலப் பராமரிப்பு என்பது நீண்ட நெடுங்காலமாக மனச்சங்கடமான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்த எண்ணத்தில் இப்போது மாற்றம் இடம்பெறுகிறது என்பதற்கு அறிகுறியாக இந்தக் கழகத்தில் உருமாற்றம் அமலாகிறது.
அதோடு மட்டுமின்றி, சுகாதாரப் பராமரிப்பைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் புதிய அணுகுமுறையைஇப்போது கைக்கொண்டு வருகிறது. இதைப் பிரதிபலிக்கும் வகை யிலும் இந்த மாற்றம் இருக்கும்.
அதாவது மக்கள் நோய்வாய்ப் படும்போது அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைக்குப் பதிலாக மக்களை உடல்நலத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பது இந்தப் புதிய அணுகுமுறையின் இலக்காக இருக்கிறது.
சுகாதார அமைச்சு, மனநல பணிக்குழு ஒன்றை 2020 அக்டோபரில் அமைத்தது. கொவிட்-19 காரணமாக வாழ்வில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மக்கள் சமாளிக்க உதவும் வகையில் அந்தப் பணிக்குழு அமைக்கப்பட்டது.
பிறகு பல அமைப்புகளையும் உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழு ஒன்று சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் அமைக்கப்பட்டது.
கொவிட்-19க்குப் பிறகும் மக்களின் மனநலனைக் கட்டிக்காப்பதற்குச் சிங்கப்பூர் எடுக்கும் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதற்காக இந்தக் குழு அமைந்தது.
அனேகமாக இந்தக் குழுவே நிரந்தர அமைப்பாக இருக்கும் என்ற வாய்ப்பும் இருக்கிறது.
மனநலக் கழகத்தில் 49க்கும் மேற்பட்ட வார்டுகளில் ஏறத்தாழ 2,000 படுக்கைகள் உள்ளன. அவற்றில் முற்றிய மன நோயாளிகளுக்கான வார்டுகள் 10 உள்ளன.
இவை 1993ல் உருவாக்கப்பட்டதைப் போலவே இன்னமும் இருக்கின்றன. இப்போது இவற்றுக்குப் புதுப்பொலிவு கொடுக்கப்படும்.
இந்தப் புதுப்பொலிவுத் திட்டம் இந்தக் கழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகப்பெரிய அளவில் இடம்பெறுகிறது என்று கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இணைப் பேராசிரியர் டேனியல் ஃபங், 56, குறிப்பிட்டார்.
"கழகம் தன் நோயாளிகளைப் பொறுத்தவரை மீட்சி, நம்பிக்கை, சுயமாகச் செயல்படுதல் என்ற மூன்று அம்சங்களில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துகிறது.
"கழகத்தில் இடம்பெறும் புதுப்பொலிவுத் திட்டம் இந்த மூன்று கவனங்களையும் வலியுறுத்துவதாக இருக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"இதுவரை, கழகம் பெரும்பாலும் நல்ல நோய் பராமரிப்பிலேயே தன்னுடைய ஒருமித்த கவனத்தைச் செலுத்தி வந்தது.
"இனிமேல் மக்களின் மனநலன் மேம்பட உதவுவதில் இது தனது கவனத்தைச் செலுத்தும்," என்று பேராசிரியர் ஃபங் குறிப்பிட்டார்.
மனநலப் புரிந்துணர்வு சமூக அளவில் மனச்சங்கடத்தைக் குறைக்கும். அதேவேளையில், மனநலப் பிரச்சினைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டு அத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டால் சுய மனச்சங்கடத்தைப் போக்கிவிடலாம் என்று பேராசிரியர் ஃபங் கூறினார்.

