பணியிடங்களிலும் வீட்டிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் "நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய சமநிலை சமுதாயத்தை" உருவாக்கும் இலக்கையொட்டி பெண்கள் மேம்பாட்டுக்கான வெள்ளை அறிக்கையை அரசாங்கம் தயாரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கான 25 செயல்திட்டங்களைக் கொண்ட சிங்கப்பூர் பெண்கள் மேம்பாடு குறித்த வெள்ளை அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கு அதிக ஆதரவு, பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் உதவி, வன்முறைச் சம்பவங்களின்போது விரைந்து நட வடிக்கை போன்றவற்றுடன், இனி அதிகமான பெண்கள் தங்கள் கருமுட்டைகளை உறைய வைக்க அனுமதிக்கப்படுவர்.
ஓராண்டுக்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, அனைத்து குடிமக்களும் தங்கள் முழுத் திறனையும் வெளிக்கொணரக்கூடிய சமூகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக்கொண்டது.
பதவி உயர்வு பெற பணியிடத்தில் உள்ள தடைகள் முதல், வீட்டில் பராமரிப்புப் பொறுப்புகள், இணைய வன்முறை, தாக்கு தல் வரை இன்னமும் பெண்களுக்கு உள்ள தடைகளையும் சவால்களையும் விவரிப்பதுடன், இவற்றுக்குத் தீர்வுகாண அரசாங்கம் முழு முயற்சி எடுக்கும் என்பதையும் அறிக்கை உறுதியளிக்கிறது.
"பெண்களுக்கு இன்னும் பல வழிகளில் ஆதரவு தேவை என்பதையும் விழிப்புணர்வு தேவை என்பதையும் உணர்த்துகிறது," என்று அறிக்கை குறித்து இம்மாதத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
"நம் வாழ்க்கையில் சந்திக்கும் பெண்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்," என்றார் அவர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கொள்கை, சட்ட மாற்றங்கள் பெண்களின் வளர்ச்சிப் பாதையில் உள்ள பல வெளிப்படையான தடைகளை நீக்கிவிட்டாலும், ஒட்டுமொத்த சமூகமும் மனப்போக்கை மாற்ற முயற்சித்தால் மட்டுமே மேலும் வெற்றி கிட்டும் என்கிறது அறிக்கை.
கருமுட்டையை உறைய வைக்கும் திட்டம் ஓர் எடுத்துக்காட்டு என்ற திருமதி டியோ, முன்னர் சமூகம் இதுகுறித்து ஆராய ஆர்வம் காட்டவில்லை என்றார்.
அடுத்த ஆண்டிலிருந்து 21 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் தங்கள் கருமுட்டையை உறைய வைக்க அனுமதிக்கப்படுவர். திருமண நிலை தகுதி கருத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
கருவுறுதலைப் பாதிக்கக்கூடிய மருத்துவப் பிரச்சினைகள் உள்ள பெண்கள் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கொள்கை மாற்றியமைக்கப்படுகிறது.
இந்த 115 பக்க வெள்ளை அறிக்கை ஐந்து முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்து கிறது. பணியிடத்தில் சம வாய்ப்புகள்; பராமரிப்பாளர்களுக்கான அங்கீகாரமும் ஆதரவும்; வன்முறை, பாதிப்புக்கு எதிரான பாதுகாப்பு; ஒற்றைத் தாய்மார், மணவிலக்கு பெற்றவர் உள்பட பெண்களுக்கான பிற ஆதரவு நடவடிக்கைகள்; மனப்போக்கு மாற்றங்கள் ஆகியவை அவை.
சமுதாய, குடும்ப மேம்பாடு மற்றும் கல்வித் துணை அமைச்சர் சன் ஷுவெலிங், கலாசார, சமூகம் இளையர் துறை மற்றும் வர்த்தக தொழில் துணையமைச்சர் லோ யென் லிங், சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் ஆகியோரின் தலைமையில் ஓராண்டு கால தொடர் உரையாடல்கள் மூலம் திரட்டப்பட்ட கருத்துகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இவை.
இந்த ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் 25 செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த வெள்ளை அறிக்கை முதன்முதலில் வெளியிடப்பட்டபோது அறிவிக்கப்பட்டன.
பணியமர்த்தல், பதவி உயர்வு, ஆட்குறைப்பு போன்றவற்றில் நியாயமற்ற நடை முறைகளைக் கொண்ட சில முதலாளி கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய பணியிட பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. புகார் அளிக்க முன்வரும் பெண்கள் பழிவாங்கலுக்கு உட்படுவதைத் தடுக்கும் வகையில், இந்தச் சட்டம் ரகசியத்தன்மையைப் பேணும்.
செயல்திட்டங்கள் திறம்பட செயல்படவும், பெண்கள் வளர்ச்சியில் சிங்கப்பூர் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடையவும் மனப்போக்கு மாற வேண்டும் என்று வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது.
பாலர்பள்ளிக் குழந்தைகளுக்கு உடல் பாதுகாப்பு விழிப்புணர்வைக் கற்பிப்பதில் தொடங்கி, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு மரியாதை, தகுந்த நடத்தை பற்றிய கட்டாய பாடத்திட்டங்களை வழங்குவதுவரை கல்வியே இதை அடைவதற்கான வழி என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. இவை அனைத்திலும் ஆண்களின் பங்கு உள்ளது என்பதையும் வெள்ளை அறிக்கை சுட்டியுள்ளது.
இதற்காக இடம்பெற்ற 160 உரையாடல்களில் பங்கேற்ற 6,000 சிங்கப்பூரர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் ஆண்கள்.
பாலின சமத்துவத்தை அடைவதற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் முயற்சி தேவை என்று குறிப்பிட்ட அறிக்கை, சமூகம், தனியார் அமைப்புகள், குடிமக்களை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

