உக்ரேனும் ரஷ்யாவும் துருக்கியில் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தையை நேற்றுத் தொடங்கின.
முன்னதாக, ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஏற்ப, நடுநிலை நாடாக செயல்படுவது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயான உணர்ச்சிபூர்வமான அம்சங்களில் விட்டுக்கொடுத்து அமைதியை நாட விரும்புவதாகவும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை உக்ரேனின் வட்டார ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
மேற்கத்திய நாடுகளை உக்ரேன் சார்ந்திருப்பது, ரஷ்யக் கட்டுப்பாட்டில் கீழுள்ள கிரைமிய தீபகற்பம், டோன்பாஸ் பகுதிகளின் நிலைமை ஆகியவை ரஷ்யா தீர்வு காண முயலும் மற்ற அம்சங்கள்.
ஏற்கெனவே நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையிலும் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று உக்ரேனிய முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில், இதுவரை 20,000க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர், 10 மில்லியன் பேர் அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஸெலன்ஸ்கி கூறினார். செச்சன்யாவில் நடந்த சண்டைகளை விட மோசமான பாதிப்புகளை ரஷ்யப் படையெடுப்பு ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்தி பக்கம் 8ல்

