வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க இலவச சுற்றுப்பயண விசா வழங்குகிறது இந்தியா. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 500,000 பேருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று சுற்றுப் பயணத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
170 நாடுகளில் வசிப்போர் இந்த இலவச விசாவுக்குத் தகுதிபெறுவர். இந்த இ-விசாவுக்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.
ஈராண்டுகளுக்கு பிறகு வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ள இந்தியா, சுற்றுப்பயணத்துறைக்குப் புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
கொவிட்-19 தொற்று காரணமாக அனைத்து சுற்றுப்பயண விசாவையும் 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி இந்தியா நிறுத்திவைத்தது. தற்போது எல்லைகளைத் திறந்துள்ள இந்தியா, பொருளியலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக சுற்றுப்பயணத்துறையில் கவனம் செலுத்துகிறது. சுற்றுப்பயணத்துறையை மேம்படுத்து வது குறித்து ஏப்ரல் 12, 13ஆம் தேதிகளில் மாநில அரசுகளுடன் கூட்டம் நடைபெற உள்ளதாக திரு கிஷன் ரெட்டி குறிப்பிட்டார்.

