வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் மொத்தம் $28.1 பில்லியன் உதவி
நாளை 31ஆம் தேதியிலிருந்து வேலை ஆதரவுத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக 19,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு $145 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 289,500க்கும் உள்ளூர் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அந்நிறுவனங்களுக்கு ஆதரவு கிட்டும்.
சென்ற ஆண்டின் பிற்பகுதியில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட உணவு சேவைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்த வழங்குதொகை கிடைக்கும்.
இதனையடுத்து, ஒட்டுமொத்ததமாக கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது வேலைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவனங்களுக்கு $28.1 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டிருக்கும்.
கடந்த 2020 மார்ச் முதல் டிசம்பர் மாதம்வரை உள்ளூரில் 165,000 வேலைகளைப் பாதுகாக்க வேலை ஆதரவுத் திட்டம் உதவியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அது கைகொடுத்ததும் என்றும் நிதியமைச்சு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர், உள்நாட்டு வருவாய் ஆணையம் ஆகியவை நேற்று ஒரு கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்தன.
இப்போது வழங்கப்படவுள்ள வழங்குதொகை, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான ஊதியத்தை உள்ளடக்கும்.
அவ்விரு மாதங்களில் தங்களின் உள்ளூர் ஊழியர்களுக்கான மத்திய சேம நிதிப் பங்களிப்பைக் குறித்த காலக்கெடுவிற்குள் செலுத்திய நிறுவனங்கள் வழங்குதொகை பெறத் தகுதிபெறும். அவ்வாறு வழங்குதொகை பெறத் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அதுகுறித்து அஞ்சல் வழியாகத் தெரிவிக்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டத்திற்குத் தகுதிபெற, நிறுவனங்கள் குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்தனவாக இருக்க வேண்டும்; குறிப்பிட்ட தகுதிவிதிகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, உணவு சேவைகள் துறையைச் சேர்ன்ஹ ஒரு நிறுவனம், சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் இருந்து பெற்ற, செல்லத்தக்க உணவு உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், சிங்கப்பூர் தொழில்துறை தர வகைப்பாட்டுக் குறியீடு 56 அல்லது 68104ன்கீழ் அந்நிறுவனம் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், சிற்றுண்டியகம் உள்ளிட்ட உணவு நிலைய நடத்துநர்களை இந்தக் குறியீடுகள் குறிக்கும்.
இருப்பினும், இந்தக் குறியீடுகளின்கீழ் பதிவுசெய்யப்படாத, செல்லத்தக்க உணவு உரிமத்தைக் கொண்டுள்ள பல நிறுவனங்களுக்கும் மேம்படுத்த வேலை ஆதரவுத் திட்டத்தை நிதியமைச்சும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் முன்னதாக விரிவுபடுத்தியிருந்தன.
இதனிடையே, மிகுதியாக வழங்கப்பட்ட $32.2 மில்லியனைத் திருப்பிச் செலுத்தும்படி 38 நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த அந்நிறுவனங்கள் கடப்பாடு கொண்டுள்ளன என்றும் அந்த அமைப்புகள் கூறின.
மசே நிதி பங்களிப்பு கட்டாயம்
இந்நிலையில், வழங்கப்பட்ட உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் தங்கள் ஊழியர்களுக்கான உரிய மத்திய சேமநிதி பங்களிப்புகளை நிறுவனங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் செலுத்தும் மசே நிதி பங்களிப்புகளின் அடிப்படையிலேயே வேலை ஆதரவுத் திட்ட வழங்குதொகையின் மதிப்பு முடிவுசெய்யப்படும்.
அவ்வகையில், இம்மாதத்தில் 292 நிறுவனங்களுக்கு வழங்கப்படவிருந்த ஏறக்குறைய $5 மில்லியன் தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வழங்குதொகைக்குத் தகுதிபெறுவதற்கான தக்க சான்றுகளை அவை உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
"நிறுவனங்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மையையும் துல்லியத்தன்மையையும் உள்நாட்டு வருவாய் ஆணையம் உறுதிப்படுத்திய பிறகு அவை வழங்குதொகையைப் பெறும். மறுஆய்வின்போது ஏதேனும் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கேற்ப வழங்குதொகை சரிக்கட்டப்படலாம் அல்லது மறுக்கப்படலாம்," என்று தெரிவிக்கப்பட்டது.
வழங்குதொகை மறுக்கப்படுவதுடன், குற்றமிழைத்தோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

