உக்ரேன்-ரஷ்யா இடையே 34வது நாளாக நேற்று சண்டை நீடித்த நிலையில், அவ்விரு நாடுகளின் பேராளர்கள் நேற்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, உக்ரேனின் கியவ், செர்னிஹிவ் நகர்களைச் சுற்றிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா பெரிதும் குறைத்துக்கொள்ளும் என்று ரஷ்யத் தற்காப்பு துணை அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகளுக்குத் தேவையான நிபந்தனைகளையும் உருவாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இருந்தால் அணி சேராமல் நடுநிலை வகிக்கத் தயார் என்று உக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலந்து, இஸ்ரேல், துருக்கி, கனடா ஆகிய நாடுகள் உக்ரேனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் நாடுகளாகச் செயல்படும் சாத்தியம் உள்ளது.
பேச்சுவார்த்தைக்குமுன் இரு நாட்டுப் பேராளர்களும் கைகுலுக்கவில்லை என்று உக்ரேன் தொலைக்காட்சி தெரிவித்தது.
முன்னதாக, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உக்ரேன் நடுநிலை வகிக்கத் தயார் என்று உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியும் கூறியிருந்தார்.
போர் ஓய்ந்ததும் ரஷ்யாவின் கோரிக்கை தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது அவரது நிபந்தனைகளில் ஒன்று.
இதனிடையே, உக்ரேனின் மிக்கலாய்வ் நகரிலுள்ள வட்டார அரசாங்கத் தலைமையகம்மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதில் எழுவர் கொல்லப்பட்டதாகவும் 22 பேர் காயமுற்றதாகவும் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே வேளையில், தலைநகர் கியவ்வுக்கு அருகிலுள்ள இர்பின் நகரம் மீண்டும் உக்ரேன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

