லண்டனில் இந்திய மாணவி ஒருவருக்குக் கிட்டத்தட்ட உயிர்போகும் அளவிற்குச் சரமாரியாகக் கத்திக்குத்து விழுந்தது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சோனா பிஜு, 22, எனும் அம்மாணவி கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயில ஒரு மாதத்திற்கு முன்புதான் லண்டன் சென்றிருந்தார். ஈஸ்ட் ஹேம் பகுதியிலுள்ள ஹைதராபாத்வாலா உணவகத்தில் அவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அந்த உணவகத்திற்குச் சென்ற ஆடவர் ஒருவர், உணவுண்டபின் திடீரென கத்தியை எடுத்து, சோனாவைச் சரிமாரியாகக் குத்தினார். தடுக்க வந்த மற்ற ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் அவர் மிரட்டியது சிசிடிவியில் பதிவான காணொளியில் தெரிந்தது. பின்பு அங்கிருந்து அவர் ஓடிவிட்டார்.
தாக்குதலில் ஈடுபட்டவர் இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லா, 23, என்பது தெரிய வந்தது. பின்னர் அவன் கைது செய்யப்பட்டான். காயமுற்ற சோனா இன்னும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, இம்மாதம் 19ஆம் தேதி சபிதா தன்வானி, 19, என்ற பிரிட்டிஷ்-இந்திய மாணவி குத்திக் கொல்லப்பட்டார்.