இர்ஷாத் முஹம்மது
எல்லைக் கட்டுப்பாடுகள் நாளைமுதல் தளர்த்தப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விமானப் போக்குவரத்துத் துறை அதன் மனிதவளத்தை வலுவாக்கத் தன் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
கிருமித்தொற்றுச் சூழலால் விமானப் போக்குவரத்துத் துறை தவிர்க்கமுடியாத விளைவுகளைச் சந்தித்ததுடன் அதிகமான ஊழியர்களையும் இழந்தது. இனி ஏற்படக்கூடிய தேவைக்காக, முழுவீச்சில் இத்துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும் தங்களின் ஆள்சேர்ப்புப் பணிகளை மும்முரமாகச் செய்துவருவதாக சாங்கி விமான நிலையத்தை நேற்று பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
நோய்ப் பரவலுக்கு முந்திய நிலையுடன் ஒப்பிடுகையில் 65% முதல் 75% ஊழியர்கள் மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையில் நீடித்திருப்பதாக அமைச்சர் கூறினார். மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் பாதி ஊழியர்கள் வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களைப் பணியமர்த்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
புதிய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஏற்கெனவே உள்ள ஊழியர்கள் புதிய வேலை செயல்முறைகளைப் பழகிக்கொள்ளவும் கால அவகாசம் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துப் பயணிகளும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாமல் எளிதாக சிங்கப்பூருக்குள் நாளை முதல் வரலாம் என்று அரசாங்கம் சென்ற வாரம் அறிவித்தது. சிங்கப்பூருக்குள் வரும் முன்னர் கொவிட்-19 பரிசோதனையை மட்டும் அவர்கள் செய்திட வேண்டும்.
இந்த அறிவிப்பு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதில் முக்கியமான ஒரு படி என்று அமைச்சர் குறிப்பிட்டபோதும் கொவிட்-19 கிருமிப் பரவலையும் உருமாறுதலையும் பொறுத்து எல்லைத் திறப்பு குறித்த கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும் என்று சுட்டினார்.
சாங்கி விமான நிலையம் மூலம் மூன்று மில்லியன் பயணிகள் 2021ஆம் ஆண்டு வந்து சென்றுள்ளனர். நோய்ப் பரவலுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் பதிவான 68 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையில் இது வெறும் 4.4% மட்டுமே.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.42 மில்லியன் பயணிகளின் போக்குவரத்து இங்கு பதிவாகியுள்ள நிலையில், அது நோய்ப் பரவலுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 13 விழுக்காடாகும்.
இந்த மாதம் நிலவரப்படி 81 விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 2,800 விமானச் சேவைகளை 46 நாடுகளின் 116 நகரங்களுக்கு இணைத்துள்ளன.
கொள்ளைநோய்க்கு முந்திய நிலையில் பதிவான பயணிகள் எண்ணிக்கையில் பாதியாவது இவ்வாண்டு அடைய முடியுமா என்று கேட்டதற்கு திரு ஈஸ்வரன், "எல்லைகளை முன்னரே திறந்துவிட்ட நாடுகள் இந்நிலையை அடைந்துவிட்டால் நாமும் அந்நிலையை அடைவோம். ஆனால், பயணம் சென்றடையும் இடத்துக்கும் அந்தப் பயணத்துக்கும் ஒரே முக்கியத்துவம்தான். நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு விமானப் போக்குவரத்துத் துறையின் மொத்த ஆற்றலையும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதே நம் இலக்கு," என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.
கூடுதல் செய்தி - பக்கம் 2ல்

