ஜோகூர்-சிங்கப்பூர் நில எல்லைகளைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் செல்லும் அனைத்து வகை வாகனங்களும், ஒரு வார காலத்திற்குச் சுங்க வரி செலுத்தத் தேவையில்லை என்று மலேசிய அரசாங்கம் நேற்று அறிவித்தது. இந்நடைமுறை ஏப்ரல் 1 முதல் 7 வரை நடப்பில் இருக்கும்.
நில எல்லைகளை மலேசியா திறந்ததை அடுத்து சுமுகமான போக்குவரத்தை உறுதிப்படுத்த சுங்கத்துறைகள், சுல்தான் இஸ்கந்தார் கட்டடத்தில் உள்ள குடிநுழைவு மற்றும் தடைக்காப்பு வளாகம், இஸ்கந்தார் புத்திரியில் உள்ள சுல்தான் அபு பக்கார் வளாகம் ஆகியவற்றில் பயணிகளுக்கு இந்த விலக்கு வழங்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
மலேசியர்களுக்கும் 'டச்-அண்ட்-கோ' மற்றும் 'ஸ்மார்ட்டேக்' அட்டைகளை நிரப்பி அல்லது பயன்படுத்தும் பயனாளர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என்றார்.
நாளை முதல் மலேசியா அதன் எல்லைகளை அனைத்துலக வருகையாளர்களுக்குத் திறக்கவுள்ளது. கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மலேசியாவுக்குள் தனிமை உத்தரவின்றி செல்லலாம்.
அதே வருகையாளர்கள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் நில எல்லைகள் வழி பயணம் செய்யும்போது கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.
தினமும் நிலவழிப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கையிலும் இனி வரம்பு ஏதும் இருக்காது. முன்னதாக விடிஎல் பேருந்துகள் மூலம் தினமும் சுமார் 4,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிங்கப்பூரில் பதிவான வாகனங்கள் ஜோகூருக்குள் செல்லும்போது சாலைக் கட்டணமாக 20 ரிங்கிட் (S$6.45) கட்டத் தேவையில்லை என்று திங்கட்கிழமையன்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அறிவித்தார்.

