அமைதிக்கு அரசு கோரிக்கை; வன்செயல் அரங்கேறினால் சுற்றுலா துறையும் படுத்துவிடும் என எச்சரிக்கை
இலங்கை 1948ல் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்குப் படுமோசமான பொருளியல் நெருக்கடியில் சிக்கிவிட்டது.
மக்களிடம் கோபம் கொந்தளிக்கிறது. அவர்களின் கோபம் அந்த நாட்டின் சக்திவாய்ந்த ராஜபக்சே குடும்பத்தை நோக்கியே பெரும்பாலும் திரும்புகிறது.
நூற்றுக்கணக்கான மக்கள் இப்போதைய அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகி வேண்டும் என்று கோரி வியாழக்கிழமை கொழும்பு புறநகர்ப் பகுதியில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு வெளியே வன்செயல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளியலை சரிவர கையாளவில்லை என்பதால் அதிபர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரினர். காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த வன்செயல்கள் தொடர்பில் 54 பேர் கைது செய்யப்பட்டார்கள். காவல் துறையினர் ஐவர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் காயம் அடைந்ததாக தெரியவந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பேருந்துகள் உள்ளிட்ட ராணுவம், காவல் துறைக்குச் சொந்தமான பல வாகனங்களைத் தீ மூட்டி எரித்து விட்டார்கள் என்று காவல் துறை பேச்சாளர் தல்துவா கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
இதனிடையே, தலைநகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கை நேற்று அதிகாரிகள் அகற்றினர். நேற்று அங்கு அமைதி நிலவியதாகத் தகவல்கள் தெரிவித்தன.
மொத்தம் 22 மில்லியன் மக்கள் வாழும் இலங்கையில் இப்போது 13 மணி நேரம் மின்தடை நிலவுகிறது. எரிபொருள் உள்ளிட்ட பலவற்றையும் இறக்குமதி செய்ய போதிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லை. பெரும் கடனில் இலங்கை சிக்கிவிட்டது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வேளையில், ஆர்ப்பாட்டத்திலும் வன்செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. பொருளியல் படுமோச மாக பாதிக்கப்பட்டு உள்ள நிலை யில், வன்செயல், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றால் சுற்றுப் பயணிகள் வராமல் போய் சுற்றுலாத் துறை முடங்கிவிடும் என்று சுற்றுலா அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா மக்களை எச்சரித்தார். மக்கள் அமைதி காத்து உதவ வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் நடந்த வன்செயலுக்கு அடையாளம் காணப்படாத தீவிர வாதக் குழுவே காரணம் என்று அதிபர் அலுவலகம் கூறியது.
சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி மக்களைக் கிளப்பிவிட்டு நாட்டை சீர்குலையச் செய்யும் வகையில் அந்தக் கலவரம் அரங்கேற்றப்பட்டதாக கைதானவர்கள் மூலம் தெரியவந்து இருக்கிறது என்றும் அதிபர் அலுவலகம் குறிப்பிட்டது.

