பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் அபாயச்சங்கு
இந்தியாவின் பல மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்கள் பொருளியல் ரீதியில் சாத்தியமற்றவை என்றும் அவை இலங்கையில் ஏற்பட்டுள்ளது போன்ற நெருக்கடியை இந்தியாவிலும் ஏற்படுத்திவிடலாம் என்றும் இந்திய அரசாங்க உயரதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கவலை தெரிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌரா உள்ளிட்டோருடன் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அரசின் கொள்கைகள் குறித்த கருத்துகளையும் அதிலுள்ள குறைபாடுகளையும் பிரதமர் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, இருபதுக்கும் மேற்பட்ட செயலாளர்கள் பிரதமரிடம் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, அண்மையில் சட்ட மன்றத் தேர்தல் நடந்த ஒரு மாநிலத்திலும் மற்ற மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்கள் பொருளியல் ரீதியில் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இல்லை என்றும் அது இலங்கையில் ஏற்பட்டுள்ளது போன்ற நிலைக்கு நாட்டைத் தள்ளிவிடலாம் என்றும் கவலை தெரிவித்தனர்.

