பூன் லே டிரைவில் புதன்கிழமை பிற்பகல் (ஏப்ரல் 6) நிகழ்ந்த ஆயுதம் ஏந்திய தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் சந்தேக ஆடவர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு காவல்துறை அதிகாரிகளால் அழைத்துச்செல்லப்பட்டனர்.
திருமண ஊர்வலத்தில் கலந்துகொண்ட 22, 23 வயதுடைய இரு ஆடவர்களைத் தாக்கிவிட்டு அந்தச் சந்தேக நபர்கள் தப்பியோடியதாக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவ்விருவரும் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் உட்லண்ட்சில் கைது செய்யப்பட்டனர்.
தாக்கப்பட்ட அவ்விரு ஆடவர்களும் திரு இம்மானுவெல் ரவி, 26, என்பவரின் நெருங்கிய நண்பர்கள். திரு ரவியின் வீட்டிற்கு அருகே இந்தத் தாக்குதல் அரங்கேறியதால் அன்றைய தினம் அவரது திருமண நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணியளவில், புளோக் 177 பூன் லே டிரைவில் உள்ள கார் நிறுத்துமிடத்துக்கு அந்தச் சந்தேக ஆடவர்களுடன் காவல்துறையினர் வந்தடைந்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிட அவ்விருவரும் காவல்துறை வாகனத்தைவிட்டு தனித்தனியாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
அவர்களின் கைகளும் கால்களும் வார்களால் கட்டுப்படுத்தப்பட்டன. ஐந்து காவல்துறை விசாரணை அதிகாரிகளுடன் அந்தப் பகுதியைச் சுற்றி அந்த ஆடவர்கள் நடந்து சென்றனர்.
அவ்விருவரும் வெள்ளை சட்டை, நீல காற்சட்டை, செருப்பு அணிந்திருந்தனர். கை, கால், கழுத்தில் அவர்கள் பச்சை குத்தியிருந்தனர்.