ஜனநாயகங்கள்-ஏகாதிபத்தியங்கள் மோதலாக பார்க்கும்பட்சத்தில் பிரச்சினை சிக்கலாவதாக திரு லீ கருத்து
உக்ரேனில் நடக்கும் போரை ஜனநாயகங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடைப்பட்ட மோத லாகப் பார்க்கும்பட்சத்தில் பிரச்சினை சிக்கலடைவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
அதன் காரணமாக சீனா தானாகவே தவறான முகாமில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று அவர் கூறினார். ரஷ்யாவைக் கண்டிக்க இயலாத ஒரு நிலையில் சீனா இருப்பதற்கு இதுவே காரணம் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
உக்ரேன் பிரச்சினை ஜனநாயகங்கள், ஏகாதிபத்தியங்கள் போராக பார்க்கப்படாமல் இறையாண்மை, சுதந்திரம், எல்லைகளைக் காப்பதற்கான போராக கருதப்பட்டால் அதை சீனாகூட ஆட்சேபித்து இருக்காது.
உண்மையிலேயே அது தனிப்பட்ட முறையில் வலுவான ஆதரவை வழங்கி இருக்கும் என்று தி வால் ஸ்திரீட் ஜெர்னல் செய்தியாளர்களுடன் நியூயார்க்கில் ஏப்ரல் 1ஆம் தேதி கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது திரு லீ குறிப்பிட்டார்.
திரு லீ, இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தபோது தெரிவித்த இந்தக் கருத்துகளை அவரின் அலுவலகம் நேற்று வெளியிட்டது.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்து இருக்கிறது. இதைக் கண்டிக்க சீனா மறுத்து வருகிறது.
உக்ரேன் போருக்கு மூன்று வார காலம் முன்னதாக ரஷ்யா வுடன் எல்லையில்லா தோழமை உடன்பாடு ஒன்றில் சீனா கையெழுத்திட்டது. இதை மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் குறைகூறி வருகின்றன. உக்ரேனில் நடக்கும் போரை பல நாடுகள் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை நிலவரம் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
உக்ரேனில் நமக்கு எல்லா ருக்குமே ஒரு பிரச்சினை. இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஆகியவை பற்றி பேசும் பட்சத்தில் பல நாடுகள் ஒன்றாக நம்மோடு சேர்ந்து ஆதரவு கொடுக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
இறையாண்மை, எல்லைக் கோட்பாடுகள் ஐநாவில் ஒவ்வொரு முறை எழும்போதும் சிங்கப்பூர் அந்தக் கோட்பாடுகளுக்குத் தோள்கொடுத்து இருக்கும் நாடுகளில் ஒன்று என்பதைத் திரு லீ சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவுக்கு எதிராக சிங்கப்பூர் தடை விதித்தது ஏன் என்பதையும் திரு லீ விளக்கினார்.
உக்ரேனில் நிகழ்ந்து இருப்பவை ஆசியாவின் நிலவரங்களில் தாக்கத்தைக் கொண்டிருக்கும். அதன் காரணமாக இந்த வட்டாரத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுவடிவம் பெற இயலும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
ஆசியாவில் நேட்டோ பாணி யிலான சூழ்நிலை உருவாகி வருவதாக விவேகமற்ற சிலர் பேசி இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிய திரு லீ, ஆனாலும் ஆசியா வேறுபட்ட ஒன்று என்று எச்சரித்தார்.
ஆசிய பசிபிக் நாடுகளில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா போன்றவை அமெரிக்காவின் நேச நாடுகளாக இருக்கின்றன.
நேச நாடுகளாக அல்லாமல் அதேவேளையில், நீண்டகாலமாக பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இருக்கின்றன என்பதைப் பிரதமர் திரு லீ சுட்டினார்.

